Tamilnadu

திராவிட மாடல் அரசின் சாதனை... ஓராண்டை நிறைவு செய்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - மக்கள் வாழ்த்து !

திமுக ஆட்சியமைத்த பிறகு தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. மகளிர் சார்ந்த திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த ஆண்டு (2023) அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

முதலில் 1 கோடி பேர் என இலக்கு நிர்ணயித்தாலும், அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிகளுக்குள் வரும் அனைவரையும் பயனாளர்களாக இணைக்க முடிவெடுக்கப்பட்டது. முதலில் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே பயனாளர்களாக இருந்த நிலையில், அடுத்தடுத்து விண்ணப்பித்தவர்களும் பயனாளர்களாக இணைக்கப்பட்டு வருகின்றனர். நிராகரிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்ய வழிவகைகள் செய்யப்பட்டன.

அடுத்தடுத்த மாதங்களில் பலரும் இணைக்கப்பட்டதால் பயனாளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சம் ஆனது. தொடர்ந்து தற்போது 1 கோடிக்கும் மேற்பட்ட மகளிர், மாதந்தோறும் ரூ.1000 தமிழ்நாடு அரசிடம் இருந்து பெற்று வருகின்றனர். மாதந்தோறும் 15-ம் தேதி மகளிருக்கு இந்த உரிமைத் தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

ஒருவேளை சனி, ஞாயிறு கிழமைகளில் 15-ம் தேதி வந்துவிட்டால், முன்னதாக வெள்ளிக்கிழமையே வங்கிக் கணக்குகளில் உரிமைத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கூறி, வங்கிகள் பணத்தை பிடித்தம் செய்யக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனடையும் கோடிக்கணக்கான மகளிர், தங்கள் அன்றாட தேவைகளை இதன்மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது. மேலும் தங்கள் குழந்தைகளின் சிறுசிறு தேவைகளையும் அவர்களால் நிறைவேற்றிக்கொள்ள முடிவதாக பயன்பெறும் மகளிர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் மக்களால் மிகுந்த வரவேற்பை பெற்று வருவதைத் தொடர்ந்து கர்நாடகாவில் ‘கிரகலட்சுமி’ என்ற பெயரில் மகளிர்க்கு மாதந்தோறும் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மகளிரும் இந்த திட்டத்தால் மிகுந்த பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் தொடங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு செய்கிறது. திராவிட மாடல் அரசின் பல திட்டங்கள் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில் இந்த திட்டமும் முக்கிய இடம்பிடித்துள்ளது.

மகளிர் சார்ந்த பல விசயங்களுக்கு திராவிட மாடல் அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேலும் குடும்பத்தலைவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கென 2023 - 2024ம் நிதியாண்டில் 8123.83 கோடி ரூபாயும், 2024-25ம் நிதியாண்டிற்கென 13 ஆயிரத்து 722.47 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: திமுக 75 : பவள விழாவை முன்னிட்டு இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !