Tamilnadu

அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளரை அவமதித்த நிர்மலா சீதாராமன்... இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் கண்டனம்!

மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் அதிக அளவிலான ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது. தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது.

மேலும் பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விளையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்த சூழலில் நேற்றைய முந்தினம் (11.09.2024) கோவையில் நடைபெற்ற தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சியின்போது, அன்னப்பூர்ணா நிறுவனர் சீனிவாசன், ஜி.எஸ்.டி குறித்து கேள்வியெழுப்பி, கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து அன்னப்பூர்ணா நிறுவனர் சீனிவாசன் பேசுகையில், “இனிப்பு வகை உணவுகளுக்கு 5% ஜி.எஸ்.டி என்றால், கார வகை உணவுகளுக்கு 12 % ஜி.எஸ்.டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பன்னுக்கு ஜி.எஸ்.டி கிடையாது. அதே பன்னுக்குள் க்ரீம் வைத்தால், அது 18% ஜி.எஸ்.டி ஆகிவிடுகிறது. மக்கள் பன், க்ரீமை தனி தனியாக கொண்டுவாருங்கள் என்று கேட்கிறார்கள்.

உங்கள் அருகில் உள்ள எம்.எல்.ஏ வானதி, எங்கள் உணவகத்தின் ரெகுலர் கஸ்டமர். அவர் வரும்போது எல்லாம் இனிப்பு, காரத்துக்கு தனி தனி ஜி.எஸ்.டி நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்காக எங்களிடம் தினமும் சண்டை போடுகிறார். வடநாட்டில் அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் 5% ஜிஎஸ்டியும், காரத்திற்கு 12% ஜி.எஸ்.டியும் நிர்ணயித்துள்ளதாக எம்.எல்.ஏ வானதியே கூறுகிறார்.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை இருப்பதால் கம்ப்யூட்டரே திணறுகிறது. அதேபோல ஹோட்டலுக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகளும் திணறுகிறார்கள். எனவே ஜி.எஸ்.டி வரியை முறைபடுத்த வேண்டும்” என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் பலவித கருத்துகளை பெற்று வருகிறது.

இந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோரை தனியாக சந்தித்த அன்னப்பூர்ணா உரிமையாளர், தனது பேச்சுக்கு எழுந்து நின்று கைக்கூப்பி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், தொழிலதிபர் சீனிவாசன் மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

=> இதுகுறித்து கனிமொழி எம்.பி., “‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து’

- குறள் 978, அதிகாரம் 98

ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்!” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

= > காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, “ஒருவர் தனது அனுபவத்தின் மூலம், பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது நிதியமைச்சரின் கடமை. ஆனால் அதை செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அறுவெறுப்பானதும் கூட. அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு? உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா? பாஜக, பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி. அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்.” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

= > காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஸ்ரீநேட், “நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய அன்னப்பூர்ணா குழுமத் தலைவரை மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார்கள். ஒரு வணிகர் தன்னுடைய கவலையை தெரிவிக்கக் கூட விடாமல் தன் அகங்காரத்தை பாஜக காட்டியிருக்கிறது. இது, தமிழ்நாட்டை அவமதிக்கும் செயல். பெரியாரின் நிலமான, தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியாததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.”

= > சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, “இந்தியப் பொருளாதாரத்தை நாசமாக்குவதில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து நிர்மலா சீதாராமன் அளப்பரிய பங்காற்றி இருக்கிறார். தேர்தல் முடிவுகள் அதைத்தான் காட்டின. எனினும் நிர்மலா சீதாராமனின் அகங்காரம் எள்ளளவும் குறையவில்லை. ஜிஎஸ்டி குறித்து வந்த ஒரு சிறு கருத்தை கூட ஏற்க தயாராக இல்லாமல், கருத்து சொன்னவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார். மக்களின் கருத்தை அவமதிக்கும் பாஜக அரசாங்கத்தின் போக்குக்கு சிறந்த எடுத்துக்காட்டு இது! ”

Also Read: கேள்வி கேட்ட அன்னபூர்ணா நிறுவன உரிமையாளர் : மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த நிர்மலா சீதாராமன்? - பின்னணி?