Tamilnadu

“அன்னபூர்ணா உரிமையாளரை மிரட்டியது, கோவை மக்களையே அவமானப்படுத்தியதற்கு சமம்!”: கோவை எம்.பி கணபதி கண்டனம்!

கோவையில் நடந்த குறைகேட்பு நிகழ்வில், அன்னப்பூர்ணா உணவக குழுத் தலைவர் சீனிவாசன், உணவு வகைகளில் GST-ன் வேறுபட்ட தன்மையை, கேலியாக உணர்த்தினார்.

இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்ட ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், GST மீதான குற்றச்சாட்டை ஏற்காமல், சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்த காணொளி, இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக கோவை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், கொங்கு அழகு தமிழில் தனது கோரிக்கையை எடுத்துரைத்தார். பாஜகவினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்த நாள் அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.

அதேபோல், சூலூரில் செல்ஃபோன் உதிரிபாகங்கள் தொடர்பாக இளைஞர் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் அதிகமான பாதிப்பு ஜி.எஸ்.டி.யினால் தான். எனினும், யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற தர்பார் ஆட்சி தான் ஒன்றியத்தில் நடக்கிறது. பிஸ்கட் 18% தங்கத்திற்கு 3% விதித்த போது அறிந்துகொள்ளலாம் இது யாருக்கான ஆட்சி என தெரிந்து கொள்ளலாம்.

அந்த வீடியோ அவரது அனுமதி பெற்று வெளியிடப்பட்டதா? அது தனிமனித சட்ட விதிமீறல். அந்த காட்சியை பார்க்கலாம், கற்காலத்திற்கு எடுத்து சென்றது போல் இருந்தது. அன்னபூர்ணா கோவையின் முகமாக பார்க்கப்படுகிறது. அன்னபூர்ணா உரிமையாளரை அவமானப்படுத்தியது கோவை மக்களை அவமானம் படுத்தியதற்கு சமம்.

ஜி.எஸ்.டி.யால், 30% சிறு குறு தொழிற் கூடங்கள் மூடப்பட்டு விட்டது. பெண்கள் சமூக நீதி பற்றி பேச தகுதி உள்ள கட்சி திமுக. பிரித்தால்வது இவர்களின் வேலை. மதத்தால், சாதியால் பிரித்தவர்கள் தற்போது ஆண், பெண் பற்றி பேசுகிறார்கள். குறைதீர் கூட்டம் என்ற பெயரில் அவர்களின் குட்டை அவர்களே வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த செயலின் மூலம் கோவை மக்களை அவமானப்படுத்தி உள்ளனர். தேர்தலின் போது நாங்கள் எதிர்க்கட்சி பற்றி பேசாமல் செய்த சாதனைகள் பற்றி பேசினோம், வெருப்பரசியல் பேசக்கூடாது என்று முதல்வரின் ஆணைக்கினங்க செயல்பட்டோம். அன்னபூர்ணா உரிமையாளர் மிரட்டப்பட்டதற்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு தி.மு.க துணை நிற்கும்.

கொங்கு தமிழில் நன்றாக அனைவரையும் சென்றடையும் வகையில் அன்னபூர்ணா உரிமையாளர் பேசியது சமூக வலைதளத்தில் பரவியதும், இவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம்.

ஒன்றிய அரசால் தான் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. காணொளி வெளியிட்டதற்கு தான் அண்ணாமலை வருத்தம் தெரிவித்தார், அன்னபூர்ணா உரிமையாளர் மிரட்டப்பட்டதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கவில்லை.

இதுவரை அனைத்து அரசு விழாக்களிலும், முதலமைச்சர் பங்கேற்ற விழாக்களிலும் முதல் வரிசையில் வானதி சீனிவாசனுக்கு இருக்கை கொடுத்தோம்” என தெரிவித்தார்.

Also Read: 4,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்! : தமிழ்நாட்டில் மும்முரமாக செயல்படுத்தப்படும் மதுவிலக்கு நடைமுறை!