Tamilnadu

“முதலமைச்சரின் பொருளாதார இலக்கு - தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்துள்ளது” : துரை வைகோ புகழாரம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை நோக்கி எண்ணற்ற முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர், அங்கும் பல கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்திற்காக ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த, ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைவைகோ, “முதலமைச்சராக அண்ணன் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான பாதைகளை கண்டடைவதை, உருவாக்குவதை தன் பெரும் கடமையாக கருதி தமிழ்நாட்டை (One Trillion Dollar Economy) ஒரு டிரில்லியன் டாலர் பொருளதார மாநிலமாக முன்னேற்றும் மாபெரும் கனவை கண்டு, அதையே இலக்காக நிர்ணயித்து செயல்பட்டுகொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

இந்தியாவிலேயே முன்மாதரி மாநிலமாக, சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு (TAMIL NADU Global Investors Meet - 2024) நடத்தப்பட்டது. இதன் மூலமக பல்லாயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், இலட்சியத்தை நோக்கிய பயணத்தின் இன்னொரு முயற்சியாக, தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தில், கூகுள், மைக்ரோ சாஃப்ட் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த 10க்கும் மேற்பட்ட தொழில்நுட்பத் துறை (Tech Industries) நிறுவனங்களின் 10,000 கோடி ரூபாய் முதலீடுகளை பெற தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதுநாள் வரை கையெழுத்தாகியுள்ளன.

இந்த நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி மற்றும் ஓசூர் உள்ளிட்ட தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்க உள்ளதால், பல்லாயிரக்கணக்கான படித்த, பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து தரும் ஜேபில் நிறுவனம் (Jabil Industries) 2000 கோடி ரூபாய் முதலீட்டில் திருச்சி மாவட்டத்தில் தொழிற்சாலை தொடங்க இருப்பதாகவும், இதனால் ஐயாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். உள்ளபடியே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்னும் பல முதலீடுகள் எனது திருச்சி தொகுதி நோக்கி வர இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று நம்புகிறேன்.

திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் முதல்வருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read: சட்டம் ஒழுங்கு பற்றிய விமர்சனங்கள்... தினமலருக்கும் பழனிசாமிக்கும் முரசொலி சாட்டையடி !