Tamilnadu

”கலைஞரின் திறமைகளை இளைஞர்களும் பெற வேண்டும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களுக்கான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் காரைக்குடியில் விழா நடைபெற்றது. மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”பாரிஸில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 4 வீரர்கள் பதக்கம் வென்று தாயகம் திரும்பி இருக்கிறார்கள். 6 வீரர்களுக்கும் முதலமைச்சர் உயரிய ஊக்கத்தொகை விருதை வழங்க இருக்கிறார்.

வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டியை நாம் நடத்திக் காட்டினோம். இதில் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களை வென்று தமிழ்நாடு இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்தது.இப்படி தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

ஒரு திறமையான விளையாட்டு வீரனுக்கு இருக்க வேண்டிய அத்தனை குணங்களும் திறமைகளும் கலைஞர் அவர்களுக்கு இருந்தது. அதனால் தான், யாராலும் எப்போதும் வீழ்த்த முடியாத அரசியல் வீரராக கலைஞர் அவர்கள் இந்தியாவில் உயர்ந்து நிற்கிறார். அத்தகைய கலைஞர் அவர்களுடைய பெயரிலான விளையாட்டு உபகரணங்களை பெறக்கூடிய இளைஞர்கள், மாணவர்கள் அந்த திறமைகளையும், குணங்களையும் பெற வேண்டும்.

நேற்று ஒரே நாளில் 31 ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு 2 ஆயிரம் கோடிக்கும் மேலாக வங்கி கடன் வழங்கப்பட்டது. மகளிரின் வளர்ச்சிக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அரசின் திட்டங்களை மக்களாகிய நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ஊரகப்பகுதிகளில் 5000 நீர்நிலைகளைப் புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!