Tamilnadu

“2026-ல் தி.மு.க அபார வெற்றி பெற, முப்பெரும் விழா அடித்தளமாக அமையும்”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தி.மு.கழகத்தின் பவள விழா, (75வது ஆண்டு) கழக முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை கழக தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மா. சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் கழக பவளவிழா பலூனையும் பறக்க விட்டார்.

அதன் பிறகு செய்தியாளர் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

“ஆண்டுதோறும் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும், இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக திமுக பவள விழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு முரசொலி பவளவிழா கொண்டாடப்பட்டது. 2018 நினைவேந்தல் நிகழ்ச்சி, 2019 ல் 39 பாராளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து நன்றி அறிவிப்பு விழா மாநாடு இங்குதான் நடைபெற்றது. 2023 மார்ச்-ல் முதல்வரின் 70 ஆம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தேசிய தலைவர்கள் பங்கேற்றனர்.

மகளிர் மாநாடு தேசிய அளவிலான மகளிர் தலைவர்கள் அடங்கிய மாநாடும் இங்கு நடைபெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க மாநாடுகள் இங்கு நடைபெற்றுள்ள நிலையில் முப்பெரும் விழாவும் இங்கு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக நடைபெற்ற மாநாடுகளை விட பிரமாண்டமாக இம்முறை மாநாடு நடத்தப்படும்

65 ஆயிரம் இருக்கைகள், ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்க உள்ளது. பவள விழாவையொட்டி 75 அடி உயர திமுக கொடி பறக்க உள்ளது. திமுக சாதனைகள் குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மாநாட்டிற்கு வருபவர்களுக்கு வாகன நிறுத்தம் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. AI தொழில் நுட்ப வசதியும் இந்த மாநாட்டில் பயன்படுத்தப்பட உள்ளது.

2026 ல் 200 க்கு மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெரும் என்று முதல்வர் கூறி அதற்காக செயல்பட்டு வருகிறார். அதற்கு இந்த மாநாடு அடித்தளமாக அமையும்” என்றார்.

Also Read: கோலாகலமாக தொடங்கிய ‘முதலமைச்சர் கோப்பை 2024’ - விளையாட்டு போட்டிகள் முதல் பரிசுகள் வரை - விவரம்!