Tamilnadu

கோலாகலமாக தொடங்கிய ‘முதலமைச்சர் கோப்பை 2024’ - விளையாட்டு போட்டிகள் முதல் பரிசுகள் வரை - விவரம்!

சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'முதலமைச்சர் கோப்பை' என்ற விளையாட்டுப் போட்டியினை அறிவித்தார். அதில் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகள் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என அறிவித்திருந்தார்

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்று சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் கடந்த ஆண்டு முதல் 3 இடத்தை பிடித்தது. இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான (2024) 'முதலமைச்சர் கோப்பை' போட்டி செப்டம்பரில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - 2023

இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2024 ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இன்று (10.09.2024) சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் இவ்வாண்டுக்கான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் இன்று 10.09.2024 முதல் 24.09.2024 வரை நடைபெறும். இப்போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (Online Registration) 04.08.2024 முதல் முன்பதிவு செய்யப்பட்டு 11,56,566 நபர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இவ்விளையாட்டுப் போட்டிகள் 5 வகையான (category) பிரிவுகளில் 35 வகையான விளையாட்டுக்கள் 168 பிரிவுகளில் (total events) மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட உள்ளது.

மாநில அளவில் தனி நபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ. 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும்.

Also Read: “மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்தவே SCoS கலைக்கப்பட்டதா?” - ஒன்றிய அரசுக்கு வைகோ கேள்வி !