Tamilnadu

செப்.15 : “காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழகத்தினர் வீடுகளில் கழக கொடியேற்றுவோம்!” - அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

தி.மு.கழகத்தின் பவள விழாவை - செப்டம்பர்-15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்புக் கட்டளைக்கிணங்க காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கழகத் தோழர்கள் வீடுகளிலும் கழக கொடியை ஏற்றி பட்டொளி வீசி பறக்கச் செய்திடுவோம் என்று காஞ்சி வடக்கு மாவட்டக் கழகத்தினருக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-

காஞ்சித் தலைவன் பேரறிஞர் அண்ணா அவர்களால் 1949-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட "திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பேரியக்கம், அண்ணாவின் கொள்கைத் தம்பிகளால் வளர்க்கப்பட்டு அவரது தம்பிகளில் தலையாய தம்பியான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 50 ஆண்டுகளுக்கு மேல் கட்டிக் காக்கப்பட்டு, நாம் நாளும் உயிராய் போற்றி வணங்கும் நம்முடைய உயிரினும் மேலான அன்புத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கிற வேளையில் இன்றைக்கு தி.மு.கழகம் பவள விழா ஆண்டை நிறைவு செய்கிறது.

ஒரு மாநில கட்சியான தி.மு.கழகம் முக்கால் நூற்றாண்டு காலம், தமிழ்நாட்டு மக்களின் நலன்காக்க உறுதியாக போராடியும், இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு மாநில கட்சியான தி.மு.க. வால், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியும் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியும், இந்தியாவுக்கே முன்னோடியான பல திட்டங்களை வகுத்தும், சட்டங்களை உருவாக்கியும், இன்று இந்தியாவை வழிநடத்தக் கூடிய வகையில், தி.மு. கழகம் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றும் திகழ்கிறது என்றால், அந்த பெருமை எல்லாம் நம் உயிராகவும் -உதிரமாகவும் திகழ்கின்ற தி.மு.கழகத்திற்கே உரியது.

இந்திய அளவில் தவிர்க்க முடியாத இயக்கமாக திகழ்கிறது தி.மு.க. எனும் பேரியக்கம், இந்த வரலாற்றுப் பெருமையில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் பங்கு அளப்பரியது.

75 ஆண்டுகளை கடந்து பவள விழாவை நிறைவு செய்துள்ள தி.மு.க.ழகம் என்ற பேரியக்கம் வெற்றி-தோல்விகளை கடந்து, தனது இலட்சியப் பாதையில் உறுதி குலையாமல் பயணித்து வரும் தி.மு.கவுக்கு எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதனை எதிர் கொண்டு, முதுகு வலையாமல், தரையில் தவழாமல், நெஞ்சை நிமிர்த்தி நின்று, “நான் தி.மு.காரன், நான் கலைஞரின் உடன்பிறப்பு, தளபதியின் அன்புத் தொண்டன்” என்று கம்பீரமாகச் சொல்கின்ற துணிவும் வலிவுமே கழகத் தொண்டர்களின் அடையாளம்.

அந்த கம்பீரத்துடன், பேரறிஞர் அண்ணா கண்ட திராவிட முன்னேற்றக் கழகம், தனது 75-வது ஆண்டினை பவள விழாவாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறது.

கழகத்தின் பவள விழா ஆண்டில் கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் - 15 அன்று காலை கழகத்தின் அணைத்து கிளைகளிலும் உள்ள கழக கொடிக்கம்பங்களை புதுப்பித்து கழகத்தின் இலட்சிய இருவண்ணக் கொடியை கம்பீரமாக ஏற்றிட வேண்டும் என்றும்,

அத்துடன் கழகத் தொண்டர்களால் தான் இந்த பேரியக்கம் 75 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக பீடுநடை போட்டு வருகிறது என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டிடும் வகையில், கழகத் தோழர்களின் அனைவரின் வீடுகளிலும் கழக கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்திட வேண்டும் என்று நம்முடைய நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் பாசமிகு தலைவர் தளபதி அவர்களின் அன்புக் கட்டளைக்கிணங்க, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் ஒன்றிய - நகர - பகுதி - பேரூர்களில் அடங்கி உள்ள வார்டு - கிளைகளில் உள்ள அனைத்துக் கொடிக்கம்பங்களையும் வர்ணம் தீட்டி புதுப்பித்து வருகிற செப்டம்பர்- 15 அண்ணா பிறந்த நாள் அன்று காலை 9.00 மணிக்கெல்லாம் அனைத்து கிளைகளிலும் கழக முன்னோடிகளை வைத்து, கழக கொடியை ஏற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் உள்ள கழக நிர்வாகிகள், இளைஞர் அணி- மாணவர் அணி - மகளிர் அணி உள்ளிட்ட கழக அணிகளின் நிர்வாகிகள் உட்பட ஒட்டு மொத்த கழகத்தினர் வீடுகளிலும் செப்டம்பர் 15-ஆம் தேதி காலையிலேயே கழக கொடியை ஏற்றி, கழக கொடி பட்டொளி வீசி பறப்பது பார்ப்பதற்கு கண்கொள்ள காட்சியாக இருந்திட வேண்டும் என்றும் "கட்டுக்கோப்பான தொண்டர்கள் நிறைந்த இயக்கம் தி.மு.க.” என்பதை நாட்டு மக்களுக்கு பறை சாற்றிடும் வகையில் கழகத்தினர் அனைவரின் இல்லங்களிலும் கழக கொடியை கம்பீரமாக ஏற்றி, தி.மு.கழக பவள விழாவை கழகத்தினர் குடும்ப விழாவாக கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என்றும் கழகத்தினர் அனைவரையும் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

Also Read: தேர்தல் 2024: “எனது மகள், மருமகனை ஆற்றில் தூக்கி வீசுங்கள்...” - மகாராஷ்டிரா அமைச்சர் பேச்சால் சர்ச்சை !