Tamilnadu

11 ஆம் நூற்றாண்டு சோழர்கால சிலை அமெரிக்காவில் மீட்பு : 16 வருடங்கள் விசாரணை - அசத்தும் தமிழ்நாடு போலிஸ்!

தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புபிரிவின் காவல்துறைத் தலைவர் இரா. தினகரன் அவர்களது வழிகாட்டுதலின் படியும் காவல் கண்காணிப்பாளர் இரா. சிவக்குமார், அவர்களது மேற்பார்வையிலும் தனிப்படை அமைத்து, வெளிநாட்டு தனியார் கலைப்பொருட்கள் சேகரிப்பாளர்களால் நடத்தப்படும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் இணையதளங்களில் தமிழ்நாட்டில் உள்ளகோவில்களுக்கு சொந்தமான ஏதேனும் சிலைகள் கடத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து இணையதளங்களை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தி தனிப்படை அமைக்கப்பட்டது.

இத்தனிப்படையினர் இணைய தளங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, 2008 ம் வருடம் நவம்பர் மாதம் லூயிஸ் நிக்கல்சன் என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட "Gold of the Gods” என்ற ஒரு கட்டுரையைக் கண்டறிந்தனர். அதில் கலியகல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணர் (குழந்தை கிருஷ்ணர் காலிங்கன் எனப்படும் பாம்பின் மேல் நடனமாடும் நிலையில் உள்ள) உலோக சிலையின் புகைப்படத்தினை வளைத்தளத்தில் கண்டறிந்தனர்.

பின்னர் பல்வேறு இணையதளங்களில் மேற்காணும் சிலை குறித்த தகவல்களையும் தனிப்படையினர் சேகரிக்கத்தொடங்கினர். அப்போது ”Hold on your Hat: Antiquities dealer Douglas Latchford, a/k/a Pakpong Kriangsak” என்ற பெயரில், ஒரு கட்டுரை 27.09.2019 அன்று "Association for Research Crimes Against Art” (ARCA) என்ற இணையதளத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ்லாட்ச் ஃபோர்டு என்பவர் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை தனிப்படையினர் கண்டறிந்தனர்.

இவர் கம்போடியா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இதரநாடுகளில் உள்ள தொன்மை வாய்ந்த சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர். மேலும் இவர் பன்னாட்டு கள்ளச் சந்தையில் விற்பது மற்றும் வாங்குவது போன்ற செயல்களை செய்துவருபவர் என்பதையும் கண்டறிந்தனர். மேலும் தொடர் விசாணையில் கலியகல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணரின் உலோக சிலை தற்சமயம் அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை தெரிந்துகொண்டனர்.

மேலும் டக்ளஸ்லாட்ச்ஃபோர்டு என்பவர் (2020 ம் ஆண்டு இறந்துவிட்டார்) இச்சிலையை சுபாஸ் சந்திர கபூரிடமிருந்து 2005 ம் ஆண்டு அமெரிக்க டாலர் மதிப்பில் 6,50,000 (இந்திய மதிப்பில் ரூ. 5.2 கோடி) வாங்கியதும், நான் சிவைனர் என்ற சிலை மதிப்பீட்டாளர் சுபாஸ் சந்திர கபூருக்கு மேற்காணும் சிலை குறித்தான போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு உறுதுணையாக இருந்துவந்துள்ளார் என்பதையும் கண்டறிந்தனர்

மேற்காணும் உலோக சிலை குறித்தான தொடர் விசாரணையில் இச்சிலையானது தமிழ்நாட்டின் பிற்காலச் சோழர்காலமான 11-12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. இந்நிகழ்வுகளை குறித்து ஆராய்ந்த போது கலியகல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணரின் உலோக சிலை 2005 ம் ஆண்டிற்கு முன்னர் சுபாஸ் சந்திர கபூர் மற்றும் அவரது கூட்டாளிகளால் தமிழ்நாட்டில் உள்ளஏ தேனும் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டுவிற்கப்பட்டு இருந்திருக்கலாம் என்பது தெரியவந்தது. மேலும் இச்சிலைஎந்த கோவிலிலிருந்து திருடப்பட்டது என் அறிந்திட தீவிர புலன் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மேற்காணும் நிகழ்வுகள் குறித்து பெறப்பட்ட தகவல்களின் விவரங்களை அடிப்படையில் சிலைத்திருட்டு தடுப்புபிரிவு காவல் குற்ற எண் 11/2023 சட்ட பிரிவு 380(2), 41(2),465,471 மற்றும் 120 (பி) இந்திய தண்டணை சட்டப்படி 04.09.2023 ல் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. மேலும், இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரியாக கோ. பாலமுருகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மத்தியமண்டலம், திருச்சி என்பவரை நியமனம் செய்துதொடர் விசாரணை மேற்கொள்ளுமாறு ஆணையிடப்பட்டது.

தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புபிரிவினரின் அயராத முயற்சியினாலும் மற்றும் சர்வதேச கூட்டுமுயற்சியினாலும் மேற்காணும் சிலை அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பு (HIS) கைப்பற்றிபாங்காங் அரசிடம் 11.10.2023 ல் ஒப்படைத்தனர். பின்னர் பாங்காங்கில் உள்ள இந்திய உயர் ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புபிரிவினர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல்துறை ஆகியோர்களின் இராஜதந்திர முயற்சிகள் மூலம் தாய்லாந்து அரசாங்த்தினரால் 25.06.2024 ல் இந்திய தொல்லியல்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 04.09.2024 அன்று தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புபிரிவு தனிக்குழுவினரிடம் இந்திய தொல்லியல் துறை மூலமாக பெறப்பட்டது. மேற்காணும் சிலையானது, கூடுதல் தலைமை நடுவர் நீதிமன்றம் (சிலைத் திருட்டு சிறப்பு நீதிமன்றம்) கும்பகோணம் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. மேலும் இந்த சிலை எந்த கோவிலைச் சேர்ந்தது என்பதை கண்டறிந்திட தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மேற்காணும் உலோக சிலையினை சங்கர்ஜிவால், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு இவ்வுலோக சிலையினை மீட்டெடுத்த தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புபிரிவின் தனிப்படையினரின் மெச்சத்தகுந்த பணியினை பாராட்டினார்கள்.

Also Read: செங்கல்பட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு - உற்பத்தி மைய விரிவாக்கம்! : Lincoln Electric ரூ. 500 கோடி முதலீடு!