Tamilnadu

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய ரூ.100 கோடி நில மோசடி வழக்கு : 7 ஆவது குற்றவாளியை கைது செய்தது CBCID!

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பாச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ததாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் கடந்த ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து 35 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த அ,தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கடந்த ஜூலை 16 ம் தேதி கேரளாவில் சிபிசிஐடி போலீசார் கைத செய்தனர்.

பின்னர் 15 நாள் திருச்சி மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்த எம்.ஆர். விஜயபாஸ்க நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி தினமும் காலை மாலை என இருவேளை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் அவர் கையெழுத்திட்டு வருகிறார்.

இதே வழக்கில், நான் டிரேஸ்பல் என்ற சான்றிதழ் வழங்கிய வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரதிவ்ராஜ், முதல் குற்றவாளியான பிரவீன், சென்னையைச் சேர்ந்த வழக்குறிஞர் சார்லி என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.

மேலும் இந்த வழக்கில், எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் தம்மை கைது செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சேகரின் அந்த முன் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடந்த 2 ம் தேதி சிபிசிஐடி போலீசார் கரூரில் சேகரை கைது செய்தனர். அவருடன் சேர்த்து அதிமுக பிரமுகரான செல்வராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் இந்த 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் 7 வது நபராக யுவராஜ் என்பவரை நேற்று இரவு கைது செய்தனர். போலி ஆவணங்கள் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்து அந்த பத்திரங்களை கேட்டு தன்னை மிரட்டியதாக கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதில் இரண்டாவது குற்றவாளியாக யுவராஜ் சேர்க்கப்பட்டிருந்தார். இதனையடுத்து யுவராஜ் தொடர்ந்து தலைமறைவாகி இருந்தார்.இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு அதனடிப்படையில் முன்னாள் அமைச்சர். எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட யுவராஜ் கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் பரத்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து , யுவராஜ் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை சிபிசிஐடி போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Also Read: தொடர் விடுமுறை... தமிழ்நாடு அரசு சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம் - விவரம் ?