Tamilnadu

14 ஏக்கர் நிலத்தை எழுதி கொடுக்க சொல்லி கொலை மிரட்டல் : பா.ஜ.க நிர்வாகி கைது!

சென்னை சூளைமேடு, சித்ரா அவென்யூ பகுதியைச் சேர்ந்த மூர்த்தி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் பகுதியில் நிலங்கள் வாங்குவதற்கு கடலூர் மாவட்ட பா.ஜ.க கட்சியின் மாவட்ட துணை தலைவர் சிவகுமார் என்பவரிடம் ரூ.3 கோடி பணம் கடனாக பெற்றுள்ளார்.

பின்னர் பாலூர் பகுதியில் 14.8 ஏக்கர் நிலம் வாங்கி, அதனை மேம்படுத்தி வீட்டு மனைகளாக பிளாட் போட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த நிலங்களை விற்றுத்தரும்படி சிவகுமாரிடமே கேட்டுள்ளார்.மேலும் நிலங்கள் விற்பதற்கு கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சிவகுமார் முழு இடத்தையும் அபகரிக்கும் நோக்கத்துடன் 4 பேரை அழைத்துக் கொண்டு மூர்த்தி அலுவலகத்திற்கு சென்று பாலூர் பகுதியில் வாங்கியுள்ள 14.8 ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு எழுதித்தரும்படி கேட்டு மிரட்டியுள்ளார்.

இது குறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் மூர்த்தி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையை தொடர்ந்து கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் சிவகுமாரைகைது செய்து விசாரணை செய்தனர்.மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Also Read: பாலியல் புகார் : “எந்த எல்லைக்கும் செல்வேன்” - மறுப்பு தெரிவித்த நிவின் பாலி - நடந்தது என்ன?