Tamilnadu

25வது ஆண்டை நிறைவு செய்யும் உழவர் சந்தை - விவசாயிகளுக்குப் பரிசு: கொண்டாட்டத்திற்கு தயாராகும் கழக அரசு!

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு அளிக்கும் முக்கியத்துவதற்கு இணையாக, விவசாயத்துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர் சந்தை திட்டம், ஆழ்துளை/ குழாய் கிணறு உருவாக்குதல், வேளாண்த்துறைக்கு கூடுதல் நிதி என பல்வேறு சிறப்புத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் இன்றும் மகத்தான திட்டங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது உழவர் சந்தை திட்டம்.

விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, இடைத்தரகர்கள் இல்லாத வியாபாரத்தின் மூலம் விவசாயிகள் பயன் பெறவும், விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைக்கவும் முத்தமிழறிஞர் கலைஞரால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் 'உழவர் சந்தை' திட்டம்.

உழவர் சந்தை அமைக்கும் முன்பு 1998 ஆம் ஆண்டு 'விவசாய உற்பத்திச் சந்தைப்படுத்துதல் வரி மீளாய்வுக் குழு’ என்ற பெயரில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இந்தியா முழுக்க பயணித்து விவசாய விற்பனைக் கூடங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை அறிக்கையாக சமர்ப்பித்தது.

அந்த அறிக்கை கையில் கிடைத்த அன்றே உழவர் சந்தைக்கான அறிவிப்பை வெளியிட்டார் கலைஞர். அதன்படி, 1999 நவம்பர் 14-ம் தேதி தமிழகத்தின் முதல் உழவர் சந்தையை மதுரை அண்ணா நகரில் திறந்து வைத்தார் கலைஞர். அதைத்தொடர்ந்து அப்போதைய திமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன.

அதுமட்டுமின்றி, உழவர்களுக்கு இலவசப் போக்குவரத்து வசதியும், குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் அடங்கிய அடையாள அட்டையும், முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கடை ஒதுக்கும் முறையும், இலவச எடைக் கருவிகளையும் அரசே ஏற்பாடு செய்து தந்தது. கலைஞரின் இத்தகைய நடவடிக்கையே உழவர் சந்தையை நோக்கி விவசாயிகள் செல்ல காரணமாக அமைந்தது.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் முடக்க நினைக்கும் அதிமுக ஆட்சியில்கூட இந்த உழவர் சந்தைகள் எந்தத் தடங்கலும் இன்றி சிறப்பாகச் செயல்பட்டு வந்தன. தவிர்க்க முடியாத திட்டமாய் கலைஞரின் உழவர் சந்தை திட்டம் உருவெடுத்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, முன்பிருந்ததைக் காட்டிலும் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை செய்து வருகிறது. கழக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அவர் சொன்னதைச் செய்து காட்டும் வகையில், ஆட்சிக்கு வந்த உடனேயே வேளாண் அறிக்கையைத் தயாரித்துத் தாக்கல் செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி, கலைஞரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, எந்த தடையின் இன்றி செயல்படும் உழவர் சந்தை திட்டம் மேலும் புத்துயிர் பெற்றது. தற்போது தமிழ்நாடு முழுவதும் 179 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. அதுமட்டுமல்லாது, உழவர் சந்தையைப் போலவே விரைவில் 100 உழவர் அங்காடிகள் ரூ.5 கோடி செலவில் நிறுவப்படவுள்ளது. கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இதற்கான கடைகள் கட்டப்பட்டு, இப்பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞரால் மதுரையில் 1999ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி கொண்டுவரவப்பட்ட உழவர் சந்தை திட்டம் இந்த ஆண்டோடு வெற்றி விழாவை நிறைவு செய்கிறது. இந்த வெற்றிவிழா ஆண்டை கொண்டாட தமிழ்நாடு அரசின் உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறை தயாராகி வருகிறது.

அந்தவகையில், உழவர் சந்தைகளை பயன்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், நீண்ட காலமாக உழவர் சந்தையில் பணியாற்றிய ஊழியர்கள், சிறப்பான வருவாயை எட்டிய விவசாயிகளுக்கு பரிசு வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் உழவர் சந்தை 25 என்ற தலைப்பில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை மலர் வெளியிட இருக்கிறது. இதற்காக குழு அமைத்து மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பட்டியலில் தேர்வான ஊழியர்களுக்கு வரும் நவம்பரில் பரிசு வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!