Tamilnadu

"நிதிக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம்" : ஒன்றிய அரசுக்கு அன்பில் மகேஷ் பதிலடி!

ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டிற்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் வேண்டும் என்றே பழிவாங்கி வருகிறது. ஜி.எஸ்.டி வரி தொடங்கி கல்வி திட்டங்கள் என பல திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் நிறுத்திவைத்துள்ளது மோடி அரசு.

அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தமிழ்நாட்டு மக்கள் முற்றிலுமாக புறக்கணித்து விட்டதை அடுத்து ஒன்றிய பட்ஜெட்டில் கூட தமிழ்நாட்டின் பெயரை இடம் பெறாமல் பார்த்துக் கொண்டது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டின் மீது வன்மத்துடன் ஒன்றிய அரசு நடந்து வருகிறது.

தற்போது PM SHRI திட்டத்தில் கையெழுத்திட்டால்தான் “சமக்ரா சிக்ஷா” என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய முதல் தவணையான ரூ. 573 கோடியை விடுவிப்பேன் என ஒன்றிய அரசு அடம்பிடித்து வருகிறது.

இந்நிலையில், நிதிக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமெழி உறுதியுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒன்றிய கல்வி அமைச்சரை சந்தித்தபோது PM SHRI திட்டத்திற்கு நாங்கள் நிதி கேட்கவில்லை.

சமக்ரா சிக்ஷா திட்டத்திற்குதான் நாங்கள் நிதி கேட்கிறோம். இதை இரண்டையும் ஒன்றாக முடிச்சுபோடாதீர்கள் என்று கூறினோம். PM SHRI திட்டத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் என்ன என்று எங்களுக்கு நன்றாக தெரியும். எந்த காலத்திலும் கொள்கையை விட்டுக் கொடுத்து நாங்கள் ஒன்றிய அரசின் நிதியை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “CBSEஐ விட சிறந்தது தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம்!” : ஆளுநரின் சர்ச்சை பேச்சிற்கு அமைச்சர்கள் பதிலடி!