Tamilnadu

Nokia, PayPal உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: ரூ1000 கோடி முதலீடுகளை ஈர்த்த முதலமைச்சர்!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது, முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளில் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

சென்னை தரமணியில் புதிதாக செமி கண்டக்டர் உற்பத்திக்கான தொழில்நுட்ப மையம் அமைக்க அப்லைட் மெட்டிரியல்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. AI தொழில்நுட்பத்துடன் அமையும் இந்த தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் மூலம் 500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

சென்னை அடுத்த சிறுசேரியில் நோக்கியா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைகிறது. இதற்காக 450 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

சென்னையில் 500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரும் வகையில், தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க கீக் மைன்ட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை செம்மஞ்சேரியில் செமி கண்டக்டர் ஆராய்ச்சி மையம் அமைக்க மைக்ரோசிப் நிறுவனத்துடன் 250 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இதேபோல், சென்னையில் ஏஐ தொழில்நுட்ப மையம் அமைக்க பே பால் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் புதிய மின்சாதன உபகரண ஆலை அமைக்க ஒமியம் நிறுவனத்துடன் 400 கோடி ரூபாயில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க இருக்கிறது.

கோவை சூலூரில் செமி கண்டக்டர் உற்பத்திக்கான உபகரண ஆலை அமைக்க ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

மதுரை வடபழஞ்சியில் புதிய தொழில்நுட்ப மையம் அமைக்க இன்பின்க்ஸ் நிறுவத்துடன் 50 கோடி ரூபாயில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம், மதுரையில் 700 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது.

Also Read: தமிழ்நாட்டு பள்ளி மாணவர்கள் மீது நிதித் தாக்குதல் நடத்துகிறது ஒன்றிய அரசு : முரசொலி விமர்சனம் !