Tamilnadu

நியாய விலை கடைகள் முதல் கூட்டுறவு வங்கி வரை... நவீனமயமாக்கும் திட்டம் - அமைச்சர் பெரியகருப்பன்!

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள நடராசன் மாளிகையில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளர்கள் மற்றும் துணைப் பதிவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் சேவைகளை அறிந்து கொள்ளவும் சேவைகளை பெறவும் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் இணையவழி (Online) கடன் வழங்கும் வசதியுடன் கூடிய ‘கூட்டுறவு செயலி’என்ற செயலியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், கூடுதல் பதிவாளர்‌ காயத்ரி கிருஷ்ணன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், "மக்களுக்கான சேவைகளை வழங்கும் துறையாக இந்த துறை செயல்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு கூட பல்வேறு வகையான கடன்கள் வழங்க வேண்டும் என முதலமைச்சரின் இலக்கு நிர்ணயித்து இருந்தார்.

கூட்டுறவு சங்கங்களின் வங்கிகள் காலத்திற்கு ஏற்ப நவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது குறிப்பாக இளம் தலைமுறையினர் விரும்பு வகையில் செயலிகள் மூலம் கொண்டு சேர்க்க சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறை வங்கியில் வாடிக்கையாளராக இருக்க சராசரியை விட சற்று கூடுதலாக இருந்தது தற்பொழுது முதலமைச்சர் அறிவித்துள்ள புதிய சிறப்பு திட்டங்கள் பெண்களுக்கான மாதாந்திர உரிமை தொகை வழங்கும் திட்டம் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

பெண்கள் உயர்கல்வி படிக்கும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தும் போதும் புதிய வாடிக்கையாளர்கள் வங்கி சேவைக்கு வந்துள்ளனர். தற்போது தமிழ் புதல்வன் திட்டத்தின் என முதலமைச்சரின் பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் கூட்டுறவு வங்கிகளில் தங்களின் கணக்குகளை தொடங்க இளம் தலைமுறையினரும் புதிய வாடிக்கையாளர்களும் முனைப்பு காட்டுகிறார்கள். நியாய விலை கடைகளில் தொடங்கி தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வரை நவீனமயமாக்குவது இந்த ஆண்டின் இலக்காக உள்ளது.

முதலமைச்சரை பொருத்தவரை செய்யப்படும் அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும். அதனால் அந்த மக்களுக்கு திட்டங்கள் பலன்களை சேர்க்க வேண்டும் என உறுதியாக உத்தரவிட்டுள்ளார். அந்த அடிப்படையில் தான் சென்ற ஆண்டு கூட கூட்டுறவுத்துறை சார்பில் 44 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு அரசாணைகள் வழங்கப்பட்டு செயல்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையில் 43 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட அறிவிப்புகளுக்கு அரசாணை வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள அறிவிப்புகளும் வெகு விரைவில் செயல்படுத்த முழு வீச்சில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஏறத்தாழ 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது அவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் பொருட்கள் மாத மாதம் சென்று சேர்கிறது. அதேபோல் அரசு சார்பில் அறிவிக்கப்படும் சிறப்பு திட்டங்களை கொண்டு சேர்க்க முடிகிறது. நெருக்கடி காலங்களாக உள்ள மழை வெள்ள நேரங்களில் எல்லாம் அதற்கு தேவையான நிவாரணங்கள் இந்த துறையின் மூலம் சென்று சேருகிறது.

முதலமைச்சர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்தார். அதையும் செய்தார். சமீபத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் நான்கு சுற்று வட்டார மாவட்டங்கள் தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்கள் என பெரு மழையால் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களுக்கு இந்த துறையால் நிவாரணங்கள் சென்று சேர்ந்தன. பொங்கல் தொகுப்புகள் சென்று சேர்க்கிறது.

குறிப்பாக விவசாய பெருங்குடி மக்களுக்கு தேவையான பயிர் கடன்களை வழங்குவதில் 16.5 கோடி ரூபாய் வரையில் இந்த ஆண்டு பயிர் கடன் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்தந்த பகுதியில் குறைகள் இருந்தால் அங்குள்ள அதிகாரிகள் மூலம் சரி செய்யப்பட்டு வருகிறது. என்ன குறை என்று தெரிவித்தால் போதும்.

35 ஆயிரம் கடைகளை நவீனமயமாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது, அது விரைவுப்படுத்தப்படும். அனைத்து கடைகளிலும் கியூ ஆர் கோடு அமைக்கும் செயல்முறை விரைவுப்படுத்தபோடும்.

நகை கடன்களை பொருத்தவரை 51% வரை அடைந்துள்ளோம். வேண்டும் என்ற அளவுக்கு கொடுக்கிறோம். நகையின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. நகையின் மதிப்பீட்டில் 75 சதவிகிதம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்மிடம் உள்ள பொருட்கள் எலிகள் போன்றவைகளால் கவரும் பொருள்களாக உள்ளது. அவற்றை பாதுகாக்க உயரமாக இருக்கும் இடத்தில் வைக்க வேண்டியுள்ளது. அதை நவீன மையப்படுத்தினாலே இது போன்ற சேதாரங்களை தடுக்கலாம்.

இந்த ஆண்டு 16,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் கொள்முதல் செய்வதை உணவுத்துறை செய்யும் விநியோகிக்கும் பணியைத்தான் கூட்டுறவு துறை செய்கிறது.

ஒரு லட்சமாக இருந்த கல்விக்கடன் இன்று 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதை உணவுத்துறை தரப்பில் செய்து வருகிறோம் தகுதி உடைய அனைவருக்கும் வழங்கப்படும்" என கூறினார்.

Also Read: “பொறுப்புகளைச் சுமந்தபடியே அமெரிக்காவுக்குப் பறக்கிறேன்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!