Tamilnadu

8 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது: ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்கள் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (27-08-2024) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், IND-TN-10-MM-34 என்ற பதிவெண் கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் 26.08.2024 அன்று கைது செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளதோடு, தற்போது 116 இந்திய மீனவர்களும், 184 படகுகளும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீனவர்கள் இதுபோன்று தொடர்ச்சியாக கைது செய்யப்படும் சம்பவங்கள், மீனவர்களின் குடும்பத்தினரிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பரப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களை மட்டுமல்லாமல், அவர்களை நம்பி வாழும் அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வையும் பாதிப்பதாக தனது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், இந்தியப் படகுகளையும் விரைவாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read: “பொறுப்புகளைச் சுமந்தபடியே அமெரிக்காவுக்குப் பறக்கிறேன்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!