Tamilnadu

“இஸ்ரேலுக்கு ஆதரவு : இனவெறி பிடித்த மோடி சர்க்கார்...” - CPI செயலாளர் முத்தரசன் காட்டம் !

பாலஸ்தீனத்துக்கு எதிராக கொடூரமாக நடந்து கொள்ளும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (ஆக 26) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தேசிய குழு உறுப்பினர் சுப்புராயன் எம்பி, ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் பேசியதாவது, "பாலஸ்தீனத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் என கொடூரமாக கொல்லப்பட்டு வருகின்றனர். ஜவஹர்லால் நேரு காலம் தொடங்கி பாலஸ்தீனத்தை தனி நாடு என்று அங்கீகரித்து இந்தியா ஆதரவு நிலை எடுத்தது.

ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய இனவெறி பிடித்த மோடி சர்க்கார், இனவெறி சர்க்காரான இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவது மிகப்பெரிய கடுமையான நேர் எதிரான கொள்கை. இத்தகைய கொள்கையை நமது நாடு பின்பற்றியதே கிடையாது. இனவெறியும் - இனவெறியும் ஒன்று சேர்ந்திருக்கிறது. இது மிக மிக அபாயகரமானது, கண்டிக்கத்தக்கது.

பாலஸ்தீனத்தை அங்கீகரித்து ஆதரவு அளிக்க வேண்டும். இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். அமெரிக்க ஏதகாதிபத்தியம் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து பாலஸ்தீனத்திற்கு எதிரான முறையில் குற்றச் செயலை செய்து கொண்டிருக்கிறது. அதனை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.

ஐ.நா. சபைக்கு கட்டுப்படாமல் முடிவுகளுக்கு மாறாக இஸ்ரேல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனுடன் இந்தியாவும் அதற்கு ஆதரவாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டை கண்டித்து ஐ.நா. சபை மிக தீவிரமாக செயல்பட வேண்டும். போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு இனவெறி அரசாங்கமாக இருக்கிறது. அதனால் இஸ்ரேலில் இருக்கக்கூடிய இனவெறி அரசிற்கு ஆதரவாக இருக்கிறது. அதனை வன்மையாக கண்டிக்கிறோம்" என்றார்.

Also Read: ஜம்மு காஷ்மீரின் 90 தொகுதிகளில் 60-ல் மட்டுமே போட்டி ? தோல்வி பயம் காரணமாக பாஜக முடிவு !