Tamilnadu

பழனியில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ - கொடியேற்றத்துடன் பிரம்மாண்டமாக துவக்கம் !

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கடந்த பிப்ரவரி, 27 ஆம் தேதி நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தில், 'தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆம் ஆண்டில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளி நாடுகளிலிருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள், ஆய்வு மாணவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனியாக வடிவமைக்கப்பட்ட https://muthamizhmuruganmaanadu2024.com இணையதளம் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.

இம்மாநாட்டிற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன. தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர். ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.

அறுபடை வீடுகளின் அரங்கங்கள், சிறப்புப் புகைப்பட கண்காட்சி. வேல்கோட்டம், 3D நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம், ஆன்மிக கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் போன்ற அம்சங்களுடன் இம்மாநாடு வரவமைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூலை 29-ம் தேதி இந்த மாநாட்டிற்கான இலச்சினையை (Logo) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார்.

தொடர்ந்து இதற்காக 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவும் ஒவ்வொரு துறையின் சார்ந்தவர்களின் 11 குழுக்களும் பல்வேறு வகையில் அமைக்கப்பட்டது. இந்த சூழலில் இந்த விழா திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று (ஆக.24) தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும், நாளையும் (ஆக 25) நடைபெறும் இந்த மாநாட்டை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பல்வேறு மடாதிபதிகள் குத்து விளக்கை ஏற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து மாநாடு கொடியை ரத்தினகிரி பாலமுருகன் ஏற்றி வைத்தார்.

மேலும் முருகன் கண்காட்சியை அமைச்சர்கள் சேகர்பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பக்தர்களுக்கு அனுமதி இலவசம்.

Also Read: நாட்டுடமை ஆக்கப்பட்ட கலைஞரின் படைப்புகள் : "புகழால் தமிழ் காப்பார் கலைஞர்"- முரசொலி புகழாரம் !