Tamilnadu

”கலைஞர் பற்றி படம் எடுக்க வேண்டும்” : நூல் வெளியிட்டு விழாவில் வேண்டுகோள் வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியிட்டு விழா சென்னை கலைவானர் அரங்கில் நடைப்பெற்று வருகிறது. நூலின் முதல் பிரதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார்.

பின்னர் மூத்த பத்திரிகையாளர் என்.ராம், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் நூல் குறித்து பேசினர். அடுத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், ”உலகத்திலேயே இதுவரை யாரும் கொண்டாடாத வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது.

கலைஞரின் நூற்றாண்டு விழாவை தி.மு.கவினர் கொண்டாடியது போல் எந்த அரசியல் தலைவருக்கும் இப்படி விழாவை இனி யாரும் கொண்டாட மாட்டார்கள்; கொண்டாடவும் முடியாது. தி.மு.க தலைவராக பொறுப்பேற்ற பிறகு போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி கண்டவர் மு.க.ஸ்டாலின். அவரின் அரசியல் ஆளுமை உழைப்புதான் இந்த வெற்றிக்கு காரணம்.

மார்க்சிம் கார்க்கி எழுதி ’தாய்’ காவியத்தை அனைவரும் படிக்க வேண்டும். இந்நூலை படித்து முத்தமிழறிஞர் கண்ணீர் வடித்து பகிர்ந்துள்ளார். இந்த நூலுக்கு இணையாக கலைஞர் எனும் ’தாய்’ காவியத்தை படைத்து இருக்கிறார் எ.வ.வேலு.

கலைஞர் ஆலமரம். அதனால்தான் அவரை யாராலும் அசைக்க முடியவில்லை. அவரது உடன் பிறப்புகள் வேர்போன்று இருக்கிறார்கள். கலைஞரை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். இன்னும் பல நூல்கள் கலைஞர் பற்றி வரும். கலைஞரை பற்றி படம் எடுக்க வேண்டும்.

இப்போது இருப்பவர்கள் யாரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பதே இல்லை. ஆனால் கலைஞர் பத்திரிகையாளர்களை பார்த்தாலே மகிழ்வார். கலைஞருக்கு பத்திரிகையாளர்களை சந்திப்பது யானைக்கு கரும்பு கிடைத்தது போன்றது.” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”தாயை போல் தமிழ்நாட்டை காத்தவர் கலைஞர்” : மூத்த பத்திரிகையாளர் என்.ராம் பாராட்டு!