Tamilnadu

"நீங்கள் மாணவிகள் மட்டுமல்ல; நம் திராவிட மாடல் அரசின் புதுமைப் பெண்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

சென்னை, பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில், கலைஞர் நூற்றாண்டு கட்டட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் பாரதி மகளிர் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டடத்தை திறந்து வைப்பதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். உங்களையெல்லாம் சந்தித்து, கலைஞர் அவர்களின் பெயரில் உள்ள கட்டடத்தைத் திறந்து வைக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அமைச்சர்கள் பொன்முடி அவர்களுக்கும், பி.கே.சேகர்பாபு அவர்களுக்கும், வந்திருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சொல்லப்போனால் என் மாமியார் வீட்டிற்கு நான் வந்திருக்கிறேன். என் மாமியாரும் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இந்தக் கல்லூரியில் கிட்டத்தட்ட 12 வருடங்களாக பேராசிரியராக சிறப்பாகப் பணியாற்றினார்கள். எனவே பெருமையாக சொல்கின்றேன். மாமியார் வீட்டிற்கு மறுபடியும் வந்திருக்கிறேன்.

பெண்களுக்கு உரிமை!

இங்கு நூற்றுக்கணக்கான மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் வரவேற்றீர்கள். உங்களையெல்லாம் பார்க்கும்போது ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. ஏனென்றால், ஒரு 100 வருடத்திற்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே வருவதற்கே பெண்களுக்கு உரிமை கிடையாது. படிப்பதற்கும் உரிமை கிடையாது. பெண்களை அடிமைகளாகத்தான் இந்தச் சமுதாயம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த அடிமைத்தனத்தை அடித்து நொறுக்கியது யார் என்றால், நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், திராவிட இயக்கமும், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகமும்தான் என்பதை நீங்கள் உணர வேண்டும். வீட்டுப் படிக்கட்டைக்கூட தாண்ட முடியாது என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட பெண்கள் இன்று நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற அனைத்துப் போட்டிகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். உங்களின் முன்னேற்றத்திற் காக நம் திராவிட மாடல் அரசில், ஏராளமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார், நம் முதலமைச்சர் அவர்கள். உங்களையெல்லாம் நாங்கள் வெறும் மாணவிகளாகப் பார்க்கவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் நம் திராவிட மாடல் அரசின் புதுமைப்பெண்கள். அதனால்தான், நம் முதலமைச்சர் அவர்கள் 'புதுமைப் பெண்' என்ற திட்டத்தையே அறிமுகப்படுதினார்கள். இந்தப் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் இன்றைக்கு ஒவ்வொரு வருடமும் 3 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். அதாவது, அரசு பள்ளியில் படித்து, எந்தக் கல்லூரியில் சென்று உயர் கல்வி படித்தாலும் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு கல்வி உரிமைத்தொகையாக, ஊக்கத்தொகையாக நம் முதலமைச்சர் அவர்கள் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கொடுக்கிறார்கள்.

'தமிழ்ப்புதல்வன்' திட்டம்

'புதுமைப்பெண்' திட்டத்தின் வெற்றி இன்றைக்கு 'தமிழ்ப்புதல்வன்' என்ற திட்டத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. 'புதுமைப்பெண்' திட்டத்தை நம் அரசு செயல்படுத்திய பிறகு உயர்கல்வி சேர்கின்ற மாணவிகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. அதனால்தான் மாணவர்களும் படிக்க வேண்டும் என்று 'தமிழ்ப்புதல்வன்' என்ற திட்டத்தை நம் முதலமைச்சர் அவர்கள் ஆகஸ்ட் 9-ஆம் தேதி துவங்கி வைத்தார். இன்றைக்கு அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி சேர்ந்துள்ள 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் மாதம் ஆயிரம் ரூபாய் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள். கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் 6 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இந்தத் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்வி ஊக்கத்தொகையை நம் முதலமைச்சர் அவர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு இன்று பல்வேறு துறைகளில் சாதனைகளைப் படைக்கிறது என்றால், அதற்கு இப்படிப்பட்ட திட்டங்கள்தான் முழுகாரணம்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கல்விக்காக ஏராளமான திட்டங்களைத் தந்தார்கள். நம் முதலமைச்சர் அவர்கள், கட்டணமில்லாப் பேருந்து வசதி, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் நிலை, கல்விக்கடனுக்கான வட்டி தள்ளுபடி இப்படிப் பல்வேறு திட்டங்களையும் அறிவித்துச் செயல்படுத்திவருகிறார். உங்களைத்தான் சேரும் தமிழ்நாட்டில் திசைக்கு ஒன்று என இருந்த கல்லூரிகளை நூற்றுக் கணக்கில் திறந்தவர், நம் கலைஞர் அவர்கள். அதனால் இன்றைக்கு உயர்கல்வியில் தமிழ்நாடு இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறது. இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கின்றவர்களின் சதவிகிதம், 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கின்ற மாநிலம் என்றால், அது நம் தமிழ்நாடுதான். அந்த பெருமை மாணவர்களாகிய உங்களைத்தான் சேரும்.

'நான் முதல்வன்' போன்ற திட்டங்கள் மூலம் என்ன வேலைக்குப் போகலாம், என்ன மாதிரியான திறன் சார்ந்த கல்வியைப் படிக்கலாம் என உங்கள் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டுதல்களும், பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. நான் முதல்வன் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த மூன்று வருடத்தில் பயன் அடைந்திருக்கிறார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. இந்த 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் ஐ.ஐ.டி, எம்.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இன்று நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வி படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக எண்ணிகையிலான 'டாப்' கல்வி நிறுவனங்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இன்று விளங்கிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில், ஒரு முக்கியமான அறிவிப்பை நம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார்கள். அதாவது, இந்தியாவிலேயே முதன்முறையாக வெளிநாடு சென்று படிக்கின்ற, அரசு பள்ளி மாணவர்களுக்கான முதல் பயணச் செலவை நம் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்ற சிறப்பான அறிவிப்பை நம் முதலமைச்சர் அவர்கள் அறி- வித்திருந்தார். 'கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பார்கள். அதற்கு உதாரணமாகத்தான் இந்த நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பாக, எழுச்சியோடு நடந்துக் கொண்டிருக்- கிறது. எனவே, நீங்கள்அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும். படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்- டுக்கொள்கிறேன். நன்றாக விளையாடினால்தான், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நன்றாகவும் படிக்க முடியும். விளையாட்டில் நீங்கள் சாதனை படைக்கலாம். இதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

இந்த நேரத்தில் விளையாட்டுத் துறையின் அமைச்சர் என்ற முறையில் இங்குள்ள பேராசிரியர்கள், ஆசிரியர்களுக்கு என் கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். விளையாட்டு வகுப்பை கடன் வாங்காதீர்கள்! மாணவிகளுக்கான விளையாட்டு வகுப்பை, அறிவியல் மற்றும் கணிதப் பாட பேராசிரியர்கள் கடன் வாங்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். வேண்டுமென்றால் அறிவியல், கணக்கு வகுப்புகளை விளையாட்டு வகுப்பிற்கு கடன் கொடுங்கள். மாணவிகளான உங்களுக்கு ஒரு கோரிக்கை.விளையாட்டு வகுப்புதான் என்று வகுப்பைப் புறக்கணித்துவிட்டு, வெளியே செல்லாதீர்கள். தயவு செய்து விளையாட்டுக்கு இன்னும் அதிகம் முக்கியத்துவம் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டு, இந்த கோரிக்கையை உங்கள் அனைவரின் முன்பும் வைத்து விடைபெறுகிறேன். கலைஞர் நூற்றாண்டு கட்டடம் இந்தக் கல்லூரியின் கல்விச் சேவைக்கு பல நூற்றாண்டுகள் துணை நிற்கட்டும் என்று கூறிக்கொண்டு இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்"என்று கூறினார்.

Also Read: காஷ்மீரில் பாஜக பறித்த ஜனநாயகத்தின் மூச்சுக் காற்று திரும்பவுள்ளது : முரசொலி தலையங்கம் !