Tamilnadu

”முதலீடுகளை கொண்டுவர முடியாவிட்டாலும் பாதகம் செய்யாதீர்” : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

தமிழ்நாட்டை நோக்கி ஆர்வத்துடன் வருகின்ற முதலீடுகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையிலான வீண் அரசியலைத் தவிர்க்கவும் என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு வருமாறு:-

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை விவாதத்தின் போதே கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு பெற்றுள்ள தொழில் முதலீடுகள், தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள், அதன் மூலம் கிடைத்த வேலைவாய்ப்புகள் குறித்து விரிவாகவும் தெளிவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திராவிட நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சர் அவர்களின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் மூலமாக ஈர்க்கப்பட்ட முதலீடுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 16 சிப்காட் பூங்காக்கள் உருவாக்கப்பட்டிருப்பதுடன் புதிதாக 21 சிப்காட் பூங்காக்கள் அமையவிருக்கின்றன .கடந்த 3 ஆண்டுகளில் 31 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் அடிக்கல் நாட்டுதல் மற்றும் தொடங்கி வைக்கப்பட்ட 68ஆயிரத்து 773 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் தொடர்ச்சியாக டாபர் உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை தொடங்க இருக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஏறத்தாழ 7 மாத இடைவெளியிலேயே இந்தளவுக்குத் திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பது என்பது தமிழ்நாடு முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலமாக இருப்பதையும், வெளிநாட்டு-வெளிமாநிலங்களின் புகழ் பெற்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டை நாடி வரும் வகையிலானக் கட்டமைப்பு வசதிகளை திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது என்பதையும் நிரூபித்திருக்கிறது.

தொழில்துறையில் தமிழ்நாட்டின் பொற்காலமாக விளங்கும் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து பகுதிகளிலும் அனைத்து மக்களுக்குமான பாரபட்சமற்ற வாய்ப்புகளை முதலீடுகள் மூலமாக உருவாக்கி வரும் நிலையில் இது பற்றி அரசியல் நோக்கத்துடன் கருத்து தெரிவிப்பவர்கள் நிறைய கவனத்துடன் வார்த்தைகளை பயன்படுத்துவதே சரியாக இருக்கும். உங்களால் புதிய முதலீடுகளையோ, புதிய தொழிலையோ கொண்டுவர முடியாவிட்டாலும், தமிழ்நாட்டை நோக்கி ஆர்வத்துடன் வருகின்ற முதலீடுகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையிலான வீண் அரசியலைத் தவிர்க்கவும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read: பெண் காவலர்களுக்கு அசத்தலான 2 முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அது என்ன?