Tamilnadu

ECR கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? : அமைச்சர் எ.வ.வேலு தகவல் !

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா ஆண்கள் விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடியில், ஒரு லட்ச சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் கூடிய ஆண்கள் விடுதிக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, "வள்ளுவர் கோட்டம் புனரமைக்கும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த கோட்டத்தில் மாலை நேரங்களில் சென்னை மக்கள் வள்ளுவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பொழுதுபோக்கு பூங்கா மற்றும் சிறப்பு உணவகம் அமைக்கப்படவுள்ளது. குறள் மண்டபம் புனரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மையம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 32 ஏக்கர் பரப்பளவில் 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய மிக பிரம்மாண்டமாக உலகத் தரத்தில் அமைக்கப்படும். பன்னாட்டு மையம் அமைப்பதற்கு கட்டடக்கலை சேவைகளுக்காக நிறுவனங்களிடமிருந்து வரைபடங்கள் பெறப்பட்டுள்ளது. புதிய யுக்தியை பயன்படுத்தி மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது.

சுமார் 1400 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் அளவிற்கு மிகப்பெரிய குளிர்சாதன கூட்டு அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் பெரிய அரங்கமாக இது அமைய உள்ளது. உலகில் பல நாடுகளில் இருப்பது போல நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மிக பிரமாண்ட உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கமாக இது அமையும். நவீன யுக்தியுடன் கட்டப்படும் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மையம் அடுத்த ஆண்டு இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்." என்றார்.

Also Read: இந்தியாவின் 4-வது பெரிய நகரம்; வந்தாரை வாழவைக்கும் நம்ம சென்னைக்கு இன்று 385-வது பிறந்தநாள்!