Tamilnadu

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டம் : பெருமையுடன் அமைச்சர் பொன்முடி சொல்வது என்ன?

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சியில் ’நம்ம ஸ்கூல் நம்ம ஊரு’ பள்ளி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி செலவில் 16 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டினர்.

பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , "’நம்ம ஸ்கூல் நம்ம ஊரு’ பள்ளி திட்டத்தின் கீழ் முதன் முதலாக நமது முதலமைச்சர் ரூ.5 லட்சம் தமது சொந்த நிதியை வழங்கி இந்த திட்டத்தை தொங்கிவைத்தார். தற்போது இந்த திட்டத்தின் கீழ் 380 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொன்முடி,"கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இதுவரை மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 தற்போது தமிழ் புதல்வன் என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் நமது முதலமைச்சர் கல்விக்காக சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்" என தெரிவித்துள்ளார்.

Also Read: புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்! : யார் இந்த முருகானந்தம்?