Tamilnadu

கிருஷ்ணகிரியில் சிறுமி வன்கொடுமை : பள்ளி தாளாளர் உள்பட 7 பேர் கைது - நாதக நிர்வாகிக்கு வலைவீச்சு!

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை NCC (தேசிய மாணவர் படை) முகாம் நடைபெற்று வந்துள்ளது. இதனால் அதே பள்ளியில் படிக்கக்கூடிய 17 மாணவிகள் அங்கே தங்கி பயிற்சி பெற்று வந்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பயிற்சியாளர் சிவராமன் என்பவர் அழைத்து சென்றுள்ளார்.

சிவராமன் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராகவும் உள்ளார். அங்கே அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த மாணவி, இதுகுறித்து பள்ளியின் தாளாளர் சாம்சன் வெஸ்லியிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட அவரோ, இதனை பெரிது படுத்த வேண்டாம் என்று மாணவியிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவிக்கு உடல்நிலை பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தற்போது இந்த விவாகரத்துக்கு உறுதுணையாக இருந்ததாக பள்ளியின் முதல்வர் சதீஷ் குமார், தாளாளர், பயிற்சியாளர் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் வெளிவந்தவுடனே குற்றம்சாட்டப்பட்ட சிவராமனை கட்சியில் இருந்து நீக்கியது நாம் தமிழர் கட்சி. தற்போது தலைமறைவாக இருக்கும் நாதக நிர்வாகி சிவராமனை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து விசாரிக்கையில் ஒரு மாணவி மட்டுமே புகார் கொடுத்துள்ள நிலையில், மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.