Tamilnadu

மருத்துவ கல்லூரிகளில் காலிபணியிடம் : அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சு. பதில்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்.வளாகத்தில் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களையும் 102 தாய் சேய் நல தொலைபேசி சேவை மூலம் கண்காணித்து மருத்துவ ரீதியாக உரிய அறிவுரைகள் வழங்கும் நிகழ்வை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மகப்பேறு இறப்பை குறைக்கும் வகையில் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களையும் 102 தாய் சேய் நல தொலைபேசி சேவை மூலம் கண்காணித்து மருத்துவ ரீதியாக உரிய அறிவுரைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தபோது :

=> 13 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர் பதவி காலியாக உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, "மருத்துவ கல்லூரியின் முதல்வர் பணி ஓய்வு பெறும்போது அடுத்த பத்து நிமிடத்தில் தகுதி வாய்ந்த கல்லூரியின் மூத்த பேராசிரியர் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆகவே மருத்துவ கல்லூரியில் கல்லூரி முதல்வர் காலிபணியிடம் என்பது கிடையாது.

கல்லூரி முதல்வர் இல்லை என்பதால் கல்லூரிகள் முடங்கி உள்ளன என்ற தோற்றத்தை உருவாக்குவது சரியல்ல. தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரி முதல்வர் பதவிக்கு தகுதியுள்ள பேராசிரியர்களை தேர்வு செய்து அவர்களின் பணி காலம் அவர்களின் செயல்பாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பரிசளிக்கப்பட்டு வரிசைப்படுத்தி பட்டியல் தயாரிக்கப்படும் அதற்கு ஒரு மாத காலம் ஆகும்.

ஆனால் பொறுப்பு முதல்வர் நியமிக்கப்படுவார். 26 கல்லூரி முதல்வர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. வருகின்ற வியாழக்கிழமை 13 பேர் நியமிக்கப்பட்டு, மீதமுள்ள 13 பேர் காத்திருக்கும் பட்டியலில் இருப்பார்கள்" என்றார்.

=> தொடர்ந்து கொல்கத்தா மருத்துவ மாணவி கொல்லப்பட்டதை கண்டித்து இன்று தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தால் தமிழகத்தில் மருத்துவ சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, "இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் அவர்களின் உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களுக்கான அன்பான வேண்டுகோள் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் மருத்துவ சேவைகள் பாதிக்காத வகையில் அவர்களின் உணர்வை வெளிப்படுத்த வேண்டும்." என்றார்.

=> குரங்கு அம்மை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான கேள்விக்கு, "வெளிநாடுகளில் இருந்து யார் வந்தாலும் விமான நிலையங்களில் குரங்கம்மை தொற்று அறிகுறி உடன் வருபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை ஒரு நபர்கள் கூட அந்த அறிகுறியுடன் வரவில்லை." என்றார்.

Also Read: 18,720 பெண் பணியாளர்களுக்காக... இந்தியாவிலேயே முதல்முறை... பிரம்மாண்ட தங்கும் விடுதி திறப்பு !