Tamilnadu

விருதுநகர் கலக்டெர் முதல் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் வரை - நல்லாளுமை விருது பட்டியல் அறிவிப்பு!

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு 'தகைசால் தமிழர் விருது' வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2024) தகைசால் தமிழர் விருது, காங்கிரஸ் மூத்த தலைவரான குமரி அனந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்த விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். அதே போல் நாளை நடைபெறும் விழாவில் இந்த இந்த ஆண்டுக்கான (2024) நல்லாளுமை விருதையும் வழங்கவுள்ளார். இந்த சூழலில் யார் யாருக்கு, எதனால் நல்லாளுமை விருது வழங்கப்படவுள்ளது என்ற பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

2022-ம் ஆண்டுக்கான நல் ஆளுமை விருது பெற்றவர்கள்

அதன் விவரம் வருமாறு :

* தரவுத் தூய்மை திட்டம் வாயிலாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தகுதியுடைய பயனாளிகளை தேர்வு செய்த - தலைமை தொழில் நுட்ப அலுவலர் முதல்வரின் முகவரித் துறை வனிதா

* உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை உயர்த்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் - ஜெயசீலன்

* சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சிகளின் வாயிலாக தமிழ் இலக்கிய படைப்புகளை உலக மொழிகளுக்கு எடுத்துச் செல்லவும், உலகின் சிறந்த நூல்களை தமிழில் மொழிபெயர்க்கவும் வழிவகை செய்த - பொது நூலகங்கள் துறை இயக்குநர் இளம்பகவத்

* மூளைச்ச்சாவடைந்த நபர்களிடம் இருந்து உறுப்புக் கொடை பெற்று நடத்தப்படும் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை மிகச் சிறப்பாக நடத்திவரும் - தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம், உறுப்பினர் செயலர் மருத்துவர் கோபால கிருஷ்ணன்

* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தாய்மார்களை உள்ளடக்கிய சுய உதவிக் குழுக்களை கொண்டு சிறப்பாக செயல்படுத்திய - தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திவ்யதர்சினி

* நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முறைகளில் புதுமைப் புகுத்திய - தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குநர் இன்னசெண்ட் திவ்யா

- ஆகிய 6 பேருக்கு தமிழ்நாடு அரசின் நல்லாளுமை விருது வழங்கப்படவுள்ளது. இந்த அப்போது, அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “புத்தக விலையேற்றத்துக்கு இதுதான் காரணம்” - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் !