Tamilnadu

”தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திராவிட மாடல் அரசு” : அமைச்சர் பொன்முடி பெருமித பேச்சு!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுக் கழகம், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மையம் இணைந்து 2 ஆம் உலக தமிழ் வளர்ச்சி மாநாடு இன்று மற்றும் நாளையும் நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி, ”தாய்மொழியை முக்கியமாக படிக்க வேண்டும், தமிழிலேயே படிக்க வேண்டும் என எல்லா பல்கலைக்கழகங்களிலும் தமிழ்மொழி கொண்டு வந்தது தி.மு.க ஆட்சியில்தான்.

இந்தியை திணிக்க கூடாது என்பது கலைஞர் காலத்திலேயே தொடங்கிய போராட்டம். இதில் இன்றுவரை தி.மு.க உறுதியுடன் இருந்து வருகிறது. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான் ’தமிழ்ப்புதல்வன்’ இந்தத திட்டத்திற்கு பெயர் வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அண்ணாலை, கலைஞர், எமது முதலமைச்சர் என அனைவரும் தமிழ்மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சாதாரணமானது அல்ல.” என தெரிவித்துள்ளார்.

அதேபோல் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,"தமிழ் வழியில் படித்தால் பொதுத் தேர்வில் கட்டண விலக்கு என கூறியவர் முத்தமிழறிஞர் கலைஞர். ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட கூறியவர் கலைஞர். அவர் வழியில் தமிழை போற்றும் விதமாக திறனறி தேர்வு நடத்தி 1,500 மாணவர்களை தேர்வு செய்து இரண்டு ஆண்டுகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தவர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.” என கூறினார்.

Also Read: அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பணிகள் : பொய் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி !