Tamilnadu

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : பா.ஜ.க நிர்வாகி பால் கனகராஜிடம் தீவிர விசாரணை!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்றுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், திருவேங்கடம் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பணம் கைமாறியுள்ளதாக போலிஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ், மலர்கொடு, ஹரிஹரன் ஆகிய மூன்று பேரை போலிஸார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட மலர்கொடு சென்னை திருவல்லிக்கேணி மேற்குப் பகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஹரிஹரன் த.மா.கா.வில் மாநில மாணவரணி துணைத் தலைவராக உள்ளார்.மேலும் இதில் பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அஞ்சலையைதணிப்படை போலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் பா.ஜ.க வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் பால் கனகராஜை விசாரணைக்கு ஆஜராகும்படி செம்பியம் தனிப்படை போலீசார் சமன் அனுப்பியிருந்தனர். இந்த சமனின் அடிப்படையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் பின்புறம் அமைந்துள்ள புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் விசாரணைக்காக பால் கனகராஜ் ஆஜரானார்.

பின்னர், பால் கனகராஜிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக செம்பியம் தனிப்படை போலீசார் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: ஆம்ட்ராங் கொலை வழக்கு : தலைமறைவாக இருந்த பா.ஜ.க பிரமுகர் கைது - தீவிர விசாரணை!