Tamilnadu

”ஒன்றிய அரசே ஒரு தேசிய பேரிடர்தான்" : கனிமொழி எம்.பி கடும் தாக்கு!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 344 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் முற்றிலுமான இடிந்து தரைமட்டமானது. மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 4 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இரண்டு நாட்களாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். ஒன்றிய அரசு வயநாட்டு பகுதியை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அதேபோல், இந்த நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன.

அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அப்போதும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க மறுத்தது. தற்போது கேரள நிலச்சரிவையும் தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு மறுத்துள்ளது.

இந்நிலையில், ஒன்றிய அரசே ஒரு தேசிய பேரிடர்தான் என கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார். இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றிய அரசு எந்த உதவியும் செய்வது இல்லை. எந்த பாதிப்பையும் தேசியப் பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. ஏனென்றால் அவர்களே தேசிய பேரிடராகத்தான் இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

Also Read: வெள்ள நிவாரண நிதி : அமித்ஷாவை சந்திக்கும் தமிழ்நாடு அனைத்துக் கட்சி MPக்கள் - முதலமைச்சர் அறிவிப்பு!