Tamilnadu

”லயோலா என்று பெயரைச் சொன்னாலே ஒரு கெத்து தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.08.2024) சென்னை, இலயோலா கல்லூரி நூற்றாண்டு தொடக்க விழாவில் ஆற்றிய விழாப் பேருரை :-

சென்னையில் எத்தனையோ கல்லூரிகள் இருந்தாலும் லயோலா மட்டும் தான் தனித்துத் தெரியும். கல்வி, ஸ்போர்ட்ஸ், ஆர்ட்ஸ் அனைத்தையும் லயோலா ஸ்டூடன்ஸ்தான் ஹைலைட்டாக தெரிவார்கள். ஏராளமான சாதனையாளர்களை உருவாக்கியிருக்கக்கூடிய இந்த லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதேநேரத்தில் கவலையோடு நிற்கிறேன். இங்கே நான் படிக்காமல் சென்றுவிட்டேன் என்ற வருத்தத்தோடு. நான் படித்தது பிரஸிடன்ஸி கல்லூரி.

அதனால் இந்த நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கின்ற நேரத்தில் ‘லயோலா’ என்று பெயரைச் சொன்னாலே, அது ஒரு பெருமைதான். ஒரு கெத்து தான்.

அப்படிப்பட்ட இந்த லயோலா கல்லூரியின் நிர்வாகிகள் - ஆசிரியர்கள் – இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என்று எல்லோருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய மகன் - மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி படித்ததும் இந்த லயோலா காலேஜ்தான். இதைக்கூட குறிப்பிட்டுச் சொன்னார்கள். உதயநிதி மட்டுமல்ல, இங்கே இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதிமாறன், அவர் அண்ணன் சன் டிவி கலாநிதி மாறன், நான் மட்டும்தான் மிஸ் ஆகிவிட்டேன். இந்தக் கல்லூரியில் தான் படித்திருக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் இந்த நிகழ்ச்சிக்கு நான் முதலமைச்சராக மட்டுமில்லை - உங்கள் காலேஜில் படித்த மாணவரின் பெற்றோராகவும் வந்திருக்கிறேன்.

இன்றைக்கு எவ்வளவோ மாறிவிட்டது! சென்னையை சுற்றி மட்டுமில்லை, தமிழ்நாடு முழுக்க ஏராளமான கல்லூரிகளையும் – பல்கலைக்கழகங்களையும் உருவாக்கியிருக்கிறோம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலை இருந்ததா? இல்லை! தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற கல்லூரிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் அப்போது! கல்விதான் அழிக்க முடியாத செல்வம் என்று சொல்கிறோமே, அந்த செல்வம் அப்போது எல்லோரும் கிடைக்கவில்லை; கிடைக்கவில்லை என்று சொல்வதைவிட கொடுக்கப்படவில்லை என்று தான் சொல்லவேண்டும்! அப்படிப்பட்ட காலக்கட்டத்தில், இங்கே பெருமையோடு பேசினார்கள். சேவை மனப்பான்மையுடன் இந்த லயோலா கல்லூரி தொடங்கப்பட்டது. அருட்தந்தை பிரான்சிஸ் பெட்ரம் S.J. மற்றும் அவருடைய சக இயேசு சபை அருட்பணியாளர்கள் இந்த காலேஜை தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளையும், கல்லூரிகளையும் உருவாக்கித் தந்த தலைவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய பிறந்த நாள் என்பது 1924-ஆம் ஆண்டில்தான் இந்த லயோலா நிறுவனத்துக்கும் அப்போதுதான் அடிக்கல் நாட்டப்பட்டது.

1925-ஆம் ஆண்டு தன்னுடைய கல்விப் பணியை இந்தக் கல்லூரி தொடங்கியது. 75 மாணவர்களோடு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி இன்றைக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னார்தான் படிக்கலாம் - இன்னார் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் தலைவிரித்து ஆடிய காலத்தில் அனைவரும் படிக்கலாம் என்ற பெரிய வாசலை திறந்து விட்ட எத்தனையோ கல்லூரிகளில் லயோலா கல்லூரியும் மிகவும் முக்கியமான ஒன்று. சமூகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குக் கல்விக் கண்ணைத் திறந்து விட்ட கல்லூரி இந்தக் கல்லூரி.

இந்திய நாட்டின் முதல் பத்து சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இந்த லயோலா கல்லூரி இருக்கிறது. இது லயோலாவுக்கு மட்டும் பெருமை மட்டுமில்லை, ஒட்டுமொத்த நம்முடைய தமிழ்நாட்டிற்கும் தான் பெருமை. இந்தியாவில் எந்த வகைப்பட்ட கல்வி நிறுவனத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் தலைசிறந்த கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடுதான் இருக்கிறது. இதற்குக் காரணம், கல்விதான் ஒருவரின் அனைத்துத் தடைகளையும் தகர்த்து தலைநிமிரச் செய்யும் என்று கல்வி புரட்சியை தொடங்கி வைத்த நீதிக்கட்சி அந்த நீதிக்கட்சி வழிவந்தவர்கள் நாங்கள். அதனால்தான் கல்விக்கு நாங்கள் அதிகம் முக்கியத்துவத்துவம் தந்தோம். இன்னும் தந்து கொண்டிருக்கிறோம். தொடர்ந்து தருவோம் என்பதுதான் எங்களுடைய நம்பிக்கை.

நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்தால்தான் நம்முடைய திராவிட மாடல் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும். பெருந்தலைவர் காமராசரின் காலம் பள்ளிக் கல்வியின் பொற்காலமாக இருந்தது. தலைவர் கலைஞர் ஆட்சிக்காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலமாக இருந்தது. இன்றைய திராவிட மாடல் ஆட்சியானது உயர் கல்வியின் பொற்காலமாக ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக திகழ்ந்து வருகிறது.

நாங்கள் நாடு ஒளிபெறப் பாடுபடுகிறோம். நீங்கள் மாணவர் சமுதாயம் ஒளிபெறப் பாடுபடுகிறீர்கள். தமிழ்நாடு ஒளிமயமானதாக இருப்பதை இந்தக் காலக்கட்டத்தில் லயோலாவும் தன்னுடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது. உங்களின் சேவை விலைமதிப்பு இல்லாதது. உங்களுடைய உழைப்பு, கணக்கிட முடியாதது. அதனால்தான் உங்களுடைய புகழும் அளவிட முடியாததாக இருக்கிறது.

இந்த கல்லூரிக்குப் புகழும் பெருமையும் கிடைப்பது போல, இங்கே படிக்கின்ற மாணவர்களுக்கும் கிடைக்கவேண்டும்!

இவ்வளவு பெரிய காலேஜில் படிக்க கிடைச்சிருக்கின்ற வாய்ப்பு எல்லோரும் நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வியின் தேவையை அடுத்தடுத்து வருகின்ற மாணவர்களிடமும் பதிய வைக்கவேண்டும். ஏனென்றால், கல்விக்கான தடைகள் புதிய வடிவங்களில் வர தொடங்கியிருக்கிறது. கல்வியின் முக்கியத்துவத்தை குறைக்கின்ற மாதிரியான பேச்சுக்கள் மீண்டும் எழத் தொடங்கியிருக்கிறது. அதையெல்லாம் அரசியல் களத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; ஆனால் மாணவர்களான நீங்கள் அறிவுக்களத்தில் உள்ள பயணத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்!

நூற்றாண்டு கண்ட லயோலா கல்லூரி ‘ஆயிரமாண்டு வாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க’ என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: “மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குகிறது” - ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!