Tamilnadu

உடலுறுப்பு தானம் : 5 பேருக்கு மறுவாழ்வளித்த இளைஞர் : திமுக இளைஞரணி உறுப்பினருக்கு அமைச்சர் மரியாதை !

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்படப்பை பகுதியில் விவேகானந்தா நகரில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் பெருமாள். இவரின் மூத்த மகன் கார்த்திக், ஆலந்தூர் 160-வது வட்ட இளைஞர் அணி திமுக அமைப்பாளராக உள்ளார். அதே போல் கார்த்திக்கின் சகோதரர் உதயகுமாரும் திமுக இளைஞர் அணியில் உறுப்பினராக இருக்கிறார். மேலும் உதயகுமார் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த சூழலில் உதயகுமார் கடந்த 24-ம் தேதி, வழக்கம்போல் தனது பணியை முடித்துவிட்டு மீனம்பாக்கம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது விபத்தில் சிக்கிய அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உதயகுமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த உதயகுமார், சிகிச்சை பலனின்றி நேற்றைய முன்தினம் (ஜூலை 26) இரவு மூளைச் சாவடைந்தார். இதையடுத்து உதயகுமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.

அதன் அடிப்படையில் உதயகுமாரின் 2 சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், எலும்பு ஆகியவை பிரித்து எடுக்கப்பட்டு தானமாக வழங்கப்பட்டது. இதில் ஒரு சிறுநீரகம் மற்றும் எலும்பு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

மற்றொரு சிறுநீரகம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதயம் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம் தற்போது 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

உடல் உறுப்பு தானம் செய்த வாலிபர் உதயகுமார் உடலுக்கு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் மற்றும் மருத்துவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது உடலுக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர், குரு சிறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் ஆகியோர் கீழ்படப்பையில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் பெருமாள் அவர்களின் இல்லத்திற்குச் சென்று படப்பை பகுதி திமுக நிர்வாகிகளுடன் உதயகுமாரின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தி, இறுதி அஞ்சலி செய்து அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்” - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!