Tamilnadu

மெட்ரோ ரயில் கட்டுமான விவகாரம் குறித்து அவதூறு பரப்பும் எச்.ராஜா : மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம் !

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆயிரம் விளக்கு துர்க்கை அம்மன் கோயில் இடிப்பு விவகாரத்தில் தவறான தகவலை பரப்பி வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மூத்த அலுவலர்களுக்கு எதிராக H.ராஜா சில தவறான மற்றும் தீங்கிழைக்கும் கருத்துகளை தெரிவித்துள்ளார் என்று எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த தவறான தகவல் பல்வேறு ஊடகங்கள் மற்றும் Youtube சேனல்களில் வெளியிடப்பட்டு இன்று பரப்பப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த தவறான தகவல், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணியில் 3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியான ஆயிரம் விளக்கு மெட்ரோ இரயில் நிலையம் அமையவுள்ள இடத்தில் துர்கை அம்மன் கோயில் மற்றும் ரத்ன விநாயகர் கோயிலை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேவையில்லாமல் இடித்து வருவதாகவும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சில உயர் அலுவலர்களை குற்றம் சாட்டுவதாகவும் கூறுகிறது. அத்தகைய தகவல்கள் தவறானவை மற்றும் முழுமையான விவரங்களை அறியாமலேயே கூறப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ திட்டத்தை தாமதமின்றி மற்றும் திறம்பட நிறைவு செய்வதற்கான நோக்கத்துடன் மட்டுமே சட்டபூர்வமாகவும் கடமையுடன் தங்கள் பொதுப் பணிகளைச் செய்து வருகின்றனர். பொதுமக்கள் பெருமளவில் பயன்பெரும் மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்தும் போது, கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகளை மாற்றுவது / சில இடங்களில் இடமாற்றம் செய்வது சில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாதவை. இதில் மத நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்களும் அடங்கும். இது சட்டத்தின் முறையான செயல்முறையைப் பின்பற்றி செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் எந்த வகையிலும் எந்த மத சார்பும் இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்றன.

சமீபத்தில், சாத்தியமான இடங்களில், 2018ல் அங்கீகரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி இடித்தல், மாற்றம் மற்றும் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய சில கோயில்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் சில பணிகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மாற்றி செயல்படுத்தியுள்ளது. தற்போது கட்டப்பட்டு வரும் நிலையத்தின் வடிவமைப்பு, ஒயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோயிலின் சுமார் 15 ஆண்டுகள் பழமையான நுழைவு கோபுரம் மற்றும் ஸ்ரீ ரத்ன விநாயகர் கோயிலை இடமாற்றம் செய்வது என்பது 2018 ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.

துரதிஷ்டவசமாக, சுரங்கப்பாதை கட்டுமான வடிவமைப்பின் கட்டுப்பாடுகள் காரணத்தினால் மேற்கூறிய கட்டமைப்புகளின் மாற்றம்/இடமாற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை. இந்த விவகாரம் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் பெருமளவில் பயன்பெரும் மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்தும் போது, அனைத்து சமூகத்தினரின் மத உணர்வுகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உரிய மதிப்பளித்து செயல்படுகிறது என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: "ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதிஷ் - நாயுடு பட்ஜெட் என்று அழைப்பதே பொருத்தம்" - துரை வைகோ விமர்சனம் !