Tamilnadu

”நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” : ஒன்றிய அமைச்சரின் அராஜக பதிலுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்!

நாடாளுமன்றத்தில் நான் உள்ளிட்ட 31 எம்பிக்கள் எழுப்பி இருந்த கேள்விக்கு (எண் 10/22.07.2024) ஒன்றிய கல்வி இணை அமைச்சர் முனைவர் சுகந்தா மஜூம்தார் அளித்துள்ள பதில் நழுவல், மறைத்தல், அராஜகம் என்கிற வகையில் அமைந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

ஒன்றிய அரசு முகமைகளால் நடத்தப்படும் தேர்வுகளில் கேள்வித்தாள் கசிவு கடந்த 10 ஆண்டுகளில் நடந்திருப்பது பற்றிய தகவல்களை நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால் போட்டி தேர்வுகளை வெவ்வேறு அமைப்புகள் பணி நியமனங்கள், உயர் கல்வி நிலைய அனுமதிகளுக்காக நடத்தி வருவதாகவும் அவை சம்பந்தமான குறிப்பான நிகழ்வுகள் பற்றிய தரவுகளை அரசு பராமரிப்பது இல்லை என்றும் அமைச்சர் பதிலளித்துள்ளார். அத்தகைய தரவுகளை தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள தேர்வு முகமைகளிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்கிற குறைந்தபட்ச அக்கறை கூட அமைச்சரின் பதிலில் வெளிப்படவில்லை. ஒருவேளை இது போன்ற தவறுகள் முறைகேடுகள் பற்றிய தரவுகளை அந்த முகமைகளை வைத்திருக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. அமைச்சரின் இந்த பதில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள நம்பிக்கை இழப்பை மேலும் அதிகரிப்பதாகவே அமைந்திருக்கிறது.

நீட் இளங்கலை பட்ட தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் பற்றி எழுப்பிய கேள்விக்கு குறிப்பிட்ட நிகழ்வில் தவறு நடந்திருப்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

சிபிஐ விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அகில இந்திய அளவில் ரகசியம் மீறப்பட்டு இருப்பதற்கான தரவுகள் இல்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். விசாரணை முடிவதற்கு கூட காத்திருக்காமல் எப்படி அமைச்சர அறிவிப்பது என்ன தார்மீகம்?

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, நீட் தேர்வுகளுக்கான முகமைகளின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை, நேர்மை பற்றிய ஆய்வுக்காக உயர்மட்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் அறிக்கையை பற்றி முன்னேற்றங்கள் காணப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த ஆய்வுகள் எல்லாம் முடிவதற்கு முன்பாகவே நீட் தேர்வுகள் தரம் உயர்வு, தகுதியை உறுதிப்படுத்தல், லாப வேட்டையை வணிக மையத்தை தடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஆகவே அதை ரத்து செய்வது பற்றிய பரிசீலனை இல்லை என்றும் அமைச்சர் கூறி உள்ளார். உயர்மட்ட குழுவின் பரிசீலனைக்கு 37,000 ஆலோசனைகள் வந்துள்ளன என்று சில நாட்களுக்கு முன்பு செய்திகளும் வெளிவந்துள்ளன.

இப்படி சிபிஐ விசாரணை, உயர்மட்ட குழுவின் ஆய்வு எதுவுமே முடிவதற்கு முன்பாக அமைச்சர் நீட் ரத்து இல்லை என்று அறிவிப்பது மேற்கண்ட விசாரணைகளை பாதிக்காதா? அவையெல்லாம் வெறும் கண் துடைப்பு என்ற எண்ணத்தை உருவாக்காதா? என்பதே எங்கள் கேள்வி

நீட் தேர்வு ரத்தாக வேண்டும் என்கிற தமிழ்நாட்டின் குரல் இன்று தேசத்தின் பல மாநிலங்களின் குரலாக மாறி இருக்கிற சூழலில் அக்கோரிக்கையை பரிசீலிக்க மறுப்பது அராஜகமானது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ”நாடகம் நடத்துவது பழனிசாமிதான்” : அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!