Tamilnadu

மக்களின் கனவை நிறைவேற்றும் அரசு : புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், தமிழ்நாட்டில் முதல் முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் இணைய தளம் வாயிலாகச் சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடியாகக் ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதிகளைப் பெறும் ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார்.

2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுயசான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்குப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2,500 சதுர அடி வரையுள்ள மனையிடத்தில், 3,500 சதுர அடி கட்டடப் பரப்பளவிற்குள் தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்குட்பட்டு குடியிருப்புக் கட்டடத்தைக் கட்டுவதற்கு விரும்பும் பொதுமக்கள் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டட அனுமதியை எளிதாகவும் உடனடியாகவும் பெற முடியும்.

சுயசான்றிதழ் திட்டம் என்பது, பொதுமக்கள் கட்டட அனுமதிக்காக அலுவலகங்களுக்குச் சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து, அதிகபட்ச வெளிப்படைத் தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டட விதிகளை எளிமைப்படுத்தியும் மக்கள் கடைப்பிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.

தற்போதுள்ள ஒற்றைச் சாளர முறையின் மூலம் ஒப்புதல் பெறுவதைக் காட்டிலும், இந்தச் சுயசான்றிதழ் திட்டத்தில் ஒப்புதல் பெறும் நடைமுறை மிகவும் எளிதான வகையில் அமைந்து பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இது தொடர்பாக, ஒற்றைச் சாளர முறையில் சுயசான்றிதழ் திட்டத்திற்கான மென்பொருள் தொகுப்பு உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

தற்போது, குடியிருப்புக் கட்டடங்களுக்கான கட்டட அனுமதி பெறுவதற்காகப் பெறப்படும் மொத்த விண்ணப்பங்களில் 72 விழுக்காடு ஊராட்சிகளிடமிருந்தும், 77 விழுக்காடு பேரூராட்சிகளிடமிருந்தும், 79 விழுக்காடு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிடமிருந்தும் பெறப்படுகிறது.

அவ்விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச் சாளர முறையில் பரிசீலனை செய்யப்படுகின்றன.பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இப்புதிய திட்டத்தின் கீழ் அனுமதி பெறும் கட்டடங்களுக்கும் சாலைக்கும் இடையில், தளர்வு (1.5 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது), கூராய்வுக்கட்டணம் (scrutiny fee) (சதுர மீட்டருக்கு ரூ.2), உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான (I & A) கட்டணங்கள் (சதுர மீட்டருக்கு ரூ.375) ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் தேவையான கட்டணங்களைச் செலுத்தியபின் விரைவுத் துலங்கல் (QR) குறியீட்டுடன் கட்டட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், முன் இடக்கள ஆய்வு மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உடனடியாகக் கட்டுமானப் பணி மேற்கொள்வதற்கும் வழிவகை செய்து கட்டட முடிவுச் சான்று பெறுவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.

Also Read: "அதிமுக காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் பழனிசாமிக்கு வந்துள்ளது" - அமைச்சர் சேகர் பாபு !