Tamilnadu

பெரியார் பல்கலை துணை வேந்தர் ஊழல் எதிரொலி - பொதுக் கலந்தாய்வில் கலந்துகொண்ட இரண்டே மாணவர்கள்!

சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன் மீது மோசடி புகார் எழுந்தது. அதாவது பதிவாளர் தங்கவேல் மற்றும் பேராசிரியர்கள் தொடங்கிய தனியார் நிறுவனமான பூட்டர் பவுண்டேஷன் மற்றும் பூட்டர் பார்க் (PUTER Park) நிறுவனங்கள் மூலம் பயிற்சி கல்வி பாடத்திட்டம் வழங்குவது தொடர்பாக பல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக அவர் மீது புகார் எழுந்தது.

அதன்பேரில், பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து துணை வேந்தரை மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்ட நிலையிலும், அது நடைபெறவில்லை.

இதைத்தொடர்ந்து அவரது பதவி காலம் ஜூன் கடந்த 30-ம் தேதியோடு நிறைவடைய இருந்த நிலையில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், வரும் 2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். பல்கலை-யின் சங்கங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதினர். எனினும் ஆளுநர் ரவி, முறைகேட்டில் ஈடுபட்ட ஜெகநாதனுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

இவ்வாறு கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஊழலில் சிக்கிய பல்கலை., துணை வேந்தருக்கு பதவி நீட்டிப்பு செய்ததன் எதிரொலியாக, நடப்பாண்டில் (2024-2025) அப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் மோசடி, ஊழல், பணியில் இருந்த துணைவேந்தர் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கையின் காரணமாக முன்பு எப்போதும் இல்லாத வகையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக காணப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக வரலாற்றிலே இல்லாத வகையில் வராண்டா அட்மிஷன் எனப்படும் பொது கலந்தாய்விற்கு இன்று அழைப்பு விடுத்திருந்தது

அதன்படி 18 பாடப்பிரிவுகளுக்கு பொது கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் இரண்டு மாணவர்கள் மட்டுமே வந்திருந்ததால் பல்கலைக்கழக நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது. மேலும் பல பாடப்பிரிவுகளில் ஒற்றை இலக்கில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றிருப்பதால் பேராசிரியர்கள் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.

Also Read: “பா.ஜ.க. ஆட்சியில் சீரழிந்த ரயில்வே துறை” - பட்டியலிட்டு விமர்சித்த செல்வப்பெருந்தகை !