Tamilnadu

சூடுபிடிக்கும் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் : பாஜக MLA நயினாரை தொடர்ந்து அவரது மகனிடமும் CBCID விசாரணை !

அண்மையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் தமிழ்நாடு முழுவதும் மார்ச் - ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. அந்த சமயத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தாம்பரம் இரயில் நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.4 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், அந்த மூன்று பேரில் முக்கிய நபர் நயினாருக்கு சொந்தமான ஹோட்டலின் ஊழியர் மற்றும் பாஜகவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து நயினார் நாகேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த வழக்கில் அடுத்தடுத்து என பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து சிக்கி வந்த நிலையில், தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் உள்ளிட்டோரும் சிக்கினர்.

தொடர்ந்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோருக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். நெல்லையிலும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறி வந்தார்.

நயினாரை தொடர்ந்து மேலும் பலரது வீடுகளிலும் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. போலீசார் அனுப்பிய சம்மனுக்கு ஏற்கனவே ஒரு முறை நயினார் ஆஜராகாமல் இருந்த நிலையில், தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் முன் நயினார் நாகேந்திரன் ஆஜராகியுள்ளார். இன்று காலை முதல் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவரது மகன் பாலாஜியிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ளப்போடுகிறது.

மேலும் நெல்லை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் முரளிதரன், நயினாரின் ஹோட்டல் ஊழியர் மணிகண்டன் உள்ளிட்டோரிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக பாஜக நிர்வாகிகள் கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகரும் ஆஜராகிய நிலையில், தற்போது நயினார், அவரது மகன் உள்ளிட்டோரும் ஆஜராகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 1.24 லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி... விக்கரவாண்டி எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் அன்னியூர் சிவா !