Tamilnadu

9.5 லட்ச வாசகர்கள்... ஓராண்டை நிறைவு செய்யும் உலக தரத்தில் உருவாக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் !

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். புத்தகங்கள் மீதும், புத்தக வாசிப்பின் மீதும் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இருந்த தீராப் பற்றினை போற்றும் விதமாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களது 100வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் சமுதாயத்தின்

அனைத்துப் பிரிவினரும் பயன்பெறும் வலகயில் தென் தமிழ்நாட்டின் அறிவுசார் கலங்கரை விளக்கமாக சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில், கலைஞர் நூற்றாண்டு நூலகம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.07.2023 அன்று பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டு நூலகமானது குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலகம், நூல்கள் மட்டுமன்றி அனைத்து வகையான தகவல் வளங்களையும் உள்ளடக்கிய இடமாகவும், கலை, பண்பாடு, அறிவியல், மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து கற்றலுக்குமான மையமாகவும் அமைந்துள்ளது.

மதுரை - புதுநத்தம் சாலையில் ரூ.120.75 கோடியில் உலகத் தரத்துக்கு இணையாக கட்டப்பட்டுள்ள இந்நூலகத்தில் சுமார் 3 லட்சத்திற்கு அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது.

கட்டிட தளங்கள் விவரம்:

6 தளங்களை கொண்டுள்ள இந்நூலகத்தின் அடித்தளத்தில் (19,314 சதுர அடி ) வாகன நிறுத்துமிடம், செய்தி, நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைக்கிறது. தரைத் தள பகுதியில் (32656) கலைக்கூடம், மாற்றுத்திறனாளி பிரிவு, மாநாட்டு கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-1, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, மின் கட்டுபாட்டு அறை, தபால் பிரிவுகள் அமைகின்றன.

>> முதல் தளத்தில் : (29,655) கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம்,பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகம், சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-2, அறிவியல் உபகரணங்கள் பிரிவு அமைக்கிறது.

>> 2-வது தளத்தில் : (29,655) தமிழ் நூல்கள்பிரிவு (குறிப்பு உதவி நூல்கள் பிரிவு) மற்றும் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்தகங்கள், திரைப் படத்துறை தொடர்பான புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவுகளும் இடம் பெறுகின்றன.

>> 3-வது தளத்தில் : (29,655) ஆங்கில நூல்கள் , ஆராய்ச்சி இதழ்கள், தமிழ் நூல்கள் அடங்கிய பிரிவுகள் அமைக்கின்றன.

>> 4-வது தளத்தில் : (20,616) சுமார் 30 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய போட்டித் தேர்வர்களுக்கான பல்வேறு துறை சார்ந்த நூல்கள் பிரிவு அமைக்கிறது.

>> 5-வது தளத்தில் : (20,616) அரிய நூல்கள், மின் நூலகம், பல்லூடகம், நூல்கள் பாதுகாத்தல், ஒளி, ஒலி தொகுப்புகள், காட்சியகம், மின்னுருவாக்கம், பார்வையற்றோருக்கான மின் நூல், ஒலி நூல் ஸ்டுடியோ, நுண்பட அட்டை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

>> 6-வது தளத்தில் : (20,616) ஆங்கில நூல்கள் (நூல் இரவல் பிரிவு), நூல் பகுப்பாய்வு , நூல் பட்டியல் தயாரித்தல், நூலக நிர்வாகம், நூல்கள் கொள்முதல், பணியாளர்கள் உணவருந்தும் பிரிவுகளும் அமைகின்றன.

இதில், குழந்தைகள் பிரிவு - 30,000; தமிழ் பிரிவு - 90,000; ஆங்கில பிரிவு - 80,000; போட்டித்தேர்வு நூல்கள் பிரிவு - 34,000; ஆங்கில குறிப்புதவி நூல்கள் - 1,28,000 என மொத்தம் 3,62,000 நூல்கள் உள்ளன. நூலகத்தை 13.07.2024 வரையில், பொதுமக்கள், வாசகர்கள், போட்டித் தேர்வர்கள் என மொத்தம் 9,51,744 பேர் பயன்படுத்தியுள்ளைர். அதாவது, நாள் ஒன்றிற்கு, சராசரியாக 2,614 பேர் இந்நூலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 173 வெளிநாட்டவரும் வருகை புரிந்துள்ளனர்.

நகரும் படிக்கட்டுகள் வசதி உள்ளிட்டவை இந்த நூலகத்தில் இருப்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கு இதனை எளிதில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. தென் மாவட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ள இந்த நூலகத்துக்கு பொது மக்களும், மாணவர்களும் தங்கள் ஆதரவை அளித்து வரும் நிலையில், இந்த நூலகம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இந்த சூழலில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறந்த வாசகர்கள், குழந்தை வாசகர்கள், கலைஞர் நூலக நூலகர்கள், நூலகக் கட்டுமானத்தில் ஈடுபட்ட பொறியாளர்கள் என அனைவருக்கும் கடந்த 14-ம் தேதி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இதுவரை இந்நூலகத்தை 9,51,744 (9 லட்சத்து 51 ஆயிரத்து 744) நபர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

Also Read: இரு வாரங்களாக வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத அசாம் மக்கள் : நீடிக்கும் பா.ஜ.க அரசின் அலட்சியம்!