Tamilnadu

“மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்கிறோம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த 15.9.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில் சுமார் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.

இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பினையும், மாணவ மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு 25.8.2023 அன்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊராகிய திருக்குவளையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வருகிறார்கள்.

இந்த சூழலில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் (ஜூலை 15) திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது மாணவர்களுக்கு உணவு பரிமாறி, நலம் விசாரித்து பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டார். அப்போது அவரது அருகில் அமர்ந்திருந்த சிறுவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு, சாப்பாடு நன்றாக இருக்கிறதா என்று விசாரித்தார். தற்போது துவங்கிவைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.

இந்த அருமையான திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த திட்டத்துக்கு தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :

"கல்வியை கனவில் கூட நினைக்கத் தயங்கிய ஒரு தலைமுறையை பள்ளிக்கூடங்கள் நோக்கி அழைத்து வந்த முன்னாள் முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடைக்கோடி மனிதர்களின் முன்னேற்றம் என்ற ஒருமித்த சிந்தனையோடு, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழறிஞர் கலைஞர் இடையே இருந்த அன்பும், நட்பும் நாடறிந்தவை.

விடுதலைப் போராட்டம், மாநில முன்னேற்றத்துக்கான ஆட்சி நிர்வாகம் - ஏழை, எளிய மக்களுக்கான அரசியல் என்று உழைத்த காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள்.

இன்று காமராஜரின் பிறந்த நாளில், உலகமே போற்றி பின்பற்றுகிற காலை உணவுத் திட்டத்தை, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்துள்ளார்கள் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இதனால் காலை உணவுத் திட்டம் மூலம் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது. கல்வி வளர்ச்சி நாளையொட்டி விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவுத்திட்டம், நம் மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பணிகளை என்றும் போற்றுவோம். அவரது புகழ் ஓங்கட்டும் !"

Also Read: தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது - நாளை அனைத்துக்கட்சி கூட்டம் : கர்நாடக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம்!