Tamilnadu

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு ரூ.1000 - சொன்னதை செய்த திராவிட மாடல் அரசு!

தமிழ்நாடு அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஏற்கனவே உள்ள சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பயனாளர்களுடன் புதிதாக இணைக்கப்பட்ட 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கும் சேர்த்து இன்று உரிமைத் தொகை வழங்கப்பட்டது.

திமுக ஆட்சியமைத்த பிறகு தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரப்படுகிறது. அந்த வகையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த ஆண்டு (2023) அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

முதலில் 1 கோடி பேர் என இலக்கு நிர்ணயித்தாலும், அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிகளுக்குள் வரும் அனைவரையும் பயனாளர்களாக இணைக்க முடிவெடுக்கப்பட்டது. முதலில் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே பயனாளர்களாக இருந்த நிலையில், அடுத்தடுத்து விண்ணப்பித்தவர்களும் பயனாளர்களாக இணைக்கப்பட்டு வருகின்றனர். நிராகரிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்ய வழிவகைகள் செய்யப்பட்டன.

அடுத்தடுத்த மாதங்களில் பலரும் இணைக்கப்பட்டதால் பயனாளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சம் ஆனது. அதைத் தொடர்ந்தும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதால் இன்று முதல் மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. அதன்படி இன்று (15-ம் தேதி) மகளிர் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனடையும் கோடிக்கணக்கான மகளிர், தங்கள் அன்றாட தேவைகளை இதன்மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது. மேலும் தங்கள் குழந்தைகளின் சிறுசிறு தேவைகளையும் அவர்களால் நிறைவேற்றிக்கொள்ள முடிவதாக பயன்பெறும் மகளிர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கென 2023 - 2024ம் நிதியாண்டில் 8123.83 கோடி ரூபாயும், 2024-25ம் நிதியாண்டிற்கென 13 ஆயிரத்து 722.47 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: lift-ல் மாட்டிக் கொண்ட நபர் : 2 நாட்களுக்கு பிறகு மீட்பு - நடந்தது என்ன?