Tamilnadu

“புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு” - அமைச்சர் பொன்முடி!

முதலமைச்சரின் காலை உணவுத் விரிவாக்கத் திட்டம் இன்று திருவள்ளூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள், எம்.பி-க்கள் இந்த மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் காலை உணவை சாப்பிட்டனர்.

அந்த வகையில் சென்னையில் முதலமைச்சரின் காலை உணவுத் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்த பின், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துவங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தினால் உயர்க்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது, "தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்தாண்டு 2.53 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் பொறியியல் படிப்பு படிப்படியாக அதிகரித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள், குறிப்பாக கிராமத்து மாணவர்கள் அதிகளவில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் உயர்க்கல்வி மாணவர் சேர்க்கை 52% உயர்ந்து இருப்பதற்கு திராவிட அரசுதான் காரணம். நடப்பாண்டில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரும் 22ம் தேதி விளையாட்டு பிரிவு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பொறியியல் படிப்பிற்கு பொதுப்பிரிவில் காலியிடங்கள் அனைத்தும் மதிப்பீடு அடிப்படையில் வழங்கப்படும். 69% இட ஒதுக்கீடு அடிப்படையில் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கான முயற்சிகள் இந்த ஆண்டு எடுக்கப்பட உள்ளது. புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் கிராம மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. கடந்தாண்டை போலவே பொறியியல் கல்லூரி கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை." என்றார்.

ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ்ப்புதல்வன் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு ரூ.1000 - சொன்னதை செய்த திராவிட மாடல் அரசு!