Tamilnadu

“2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்த வெற்றி எதிரொலிக்கும்” - அமைச்சர் பொன்முடி!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதில் அமைச்சரும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் கௌதமசிகாமணி, சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமணன் மற்றும் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகிகள், எம்.பிக்கள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது, "விக்கிரவாண்டி இடைதேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்ட அன்னியூர் சிவா மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த வெற்றி அன்னியூர் சிவாவுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். மேலும் இந்த வெற்றி அனைத்து கூட்டணி கட்சிகளும் சேர்ந்து பெற்றுக் கொடுத்த வெற்றி. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்த இரண்டு நாள் பிரசாரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

கலைஞர் நூற்றாண்டில் கிடைத்திருக்கிற மிக பெரிய வெற்றி இது. 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்த வெற்றி எதிரொலிக்கும்" என்றார்.

Also Read: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : என்கவுண்டர் செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி- தப்பியோட முயன்றபோது போலீசார் அதிரடி!