Tamilnadu

கடத்தல் வழக்கு : திருவண்ணாமலை அதிமுக ஒன்றிய செயலாளருக்கு போலிஸார் வளைவீச்சு !

திருவண்ணாமலை, செங்கம் வட்டம் மண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் பி.குணசீலன் (48). இவரது மனைவி தண்டராம்பட்டு பிடிஓ அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். எல்ஐசி ஏஜெண்டாக இருந்து வந்த குணசீலன் பின்பு சென்னைக்கு சென்று ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திருவண்ணாமலை அருகே உள்ள வேடியப்பனூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனும், குணசீலனும் கல்லூரி நண்பர்கள் ஆவர்.

இந்த சூழலில் இந்த பழக்கத்தின் அடிப்படையில் கோபாலகிருஷ்ணனிடம், குணசீலன் ரூ.2 லட்சத்தை கடனாக வாங்கியுள்ளார். இதில் ரூ.50 ஆயிரத்தை குணசீலன் திருப்பி கொடுத்த நிலையில், மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் குணசீலன் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் கோபாலகிருஷ்ணன் - குணசீலன் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று குணசீலனை சென்னையில் இருந்து வாகனம் மூலம் வலுக்கட்டாயமாக கடத்தி வந்து திருவண்ணாமலை எழில் நகரில் உள்ள அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணனுக்கு சொந்தமான செங்கல் சூளையிலும், பிறகு கலர் கொட்டாய் அருகில் உள்ள ஒரு நிலத்திலும் தங்க வைத்துள்ளார் கோபாலகிருஷ்ணன்.

பின்னர் அவரது குடும்பத்தினரிடம் பணத்தை கேட்டு மிரட்டிய நிலையில், குணசீலனின் தங்கை ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தை கோபாலகிருஷ்ணனின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் மேலும் பணம் கேட்டு காஞ்சி ரோட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் குணசீலனை அடைத்து வைத்து அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் அந்த கும்பல்.

இதையடுத்து அந்த பணத்தை குணசீலன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து அங்கிருந்து வந்த குணசீலன், இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபாலகிருஷ்ணன், ஆடையூரைச் சேர்ந்த நேரு, காம்பட்டைச் சேர்ந்த சபரி, கலர்பாளையத்தைச் சேர்ந்த ஜெயபால் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளியாக கருதப்படும் அதிமுக ஒன்றிய செயலாளர் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மக்கள் இதயங்களில் நிறைந்திருக்கும் எங்கள் தலைவரால் கிடைத்த வெற்றி” - அமைச்சர் சேகர்பாபு புகழாரம்!