Tamilnadu

மேலும் 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை - எப்போது வழங்கப்படும்? - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் !

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பி புதுப்பட்டி ஊராட்சியில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர்‌ திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

மேலும் பல்வேறு துறைகளின் கீழ் 104 பயனாளிகளுக்கு ரூ 12,93,868 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.‌ அதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை வாங்குவதற்காக பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டால்களை அமைச்சர் பார்வையிட்டார்.‌

அப்போது இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது, தமிழக முதல்வர் அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருப்பதாகவும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய உரை முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என கூறினார்.

மகளிர் உரிமைத் தொகை தற்போது ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும், மகளிர் உரிமைத் தொகை பெற, ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பங்களில் பல்வேறு காரணங்களால் விடுபட்டுள்ள நபர்களுக்கு ஜூலை 15ஆம் தேதி ஒரு லட்சத்து 48 ஆயிரம் நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து மக்கள் அதிகாரிகளையும் அரசாங்கத்தையும் தேடிச் சென்று, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றி மக்களை நோக்கி அரசாங்கம் செல்ல வேண்டும் மக்கள் பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் ஒன்றிணைந்து மக்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் மக்கள் இருக்கும் இடத்தில் சென்று நேரடியாக அறிந்து கொண்டு அவற்றுக்கான தீர்வை அளிப்பதற்காகவே இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Also Read: ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் : 190 கேள்விகள்... பாஜக நிர்வாகி SR சேகரிடம் 7 மணி நேரம் CBCID விசாரணை !