Tamilnadu

நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் - தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நன்றி !

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம். திருவிழா நடைபெறுவதால் 4 நாட்களுக்கு பக்தர்களை அனுமதிப்பதில் சிரமம் இருக்கும் என தீட்சிதர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவால் பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி. அரசின் தொடர் முயற்சியால் சமூக நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பதாக மக்கள் கருத்து.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாத ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்து வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை காலை தேரோட்டமும், நாளை மறுநாள் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவையொட்டி பல்வேறு பூஜைகள் நடைபெற இருப்பதால் இன்று முதல் வருகிற 13-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சிறிய இடமாக இருக்கும் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வது சிரமமாக இருக்கும். அதனால் பூஜைகளுக்கு இடையூறு ஏற்படும். எனவே பூஜைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு மனு அளிக்கப்பட்டது.

இந்த சூழலில் நேற்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது நீதிபதிகள் ஒரு கருத்து தெரிவித்தனர். அரசாணை இருக்கும்போது கனகசபை மீது ஏறக்கூடாது என சொல்வதற்கு உரிமை இல்லை. தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம். அதை தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் ஏற்கெனவே தீட்சிதர்கள் கனகசபைபை மீது இன்று ஏற முடியாது என அறிவித்து இருந்த நிலையில் இன்று காலை முதல் பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று காலை 6 மணி அளவில் பூஜை முடிந்த பிறகு சிறிது நேரம் பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அதைத்தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது.

தேர் திருவிழாவையொட்டி பல்வேறு பூஜைகள் அதிகமாக இருப்பதால் அவ்வப்போது பூஜைகளின் இடைவேளையின்போது பக்தர்கள் கனசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதை கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கனகசபை அருகே இருந்தபடி கண்காணித்து வருகின்றனர்.

தமிழக அரசின் தொடர் நடவடிக்கை மற்றும் இந்து அறநிலை துறையின் முயற்சியால் தற்பொழுது சிதம்பரம் நடராஜர் கோவிலில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாக இங்கு வரக்கூடிய பக்தர்கள் மற்றும் சிதம்பரம் நடப்பது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Also Read: மோடி தொகுதியில் இருக்கும் பிரபல கூட்டுறவு வங்கியை மூட RBI உத்தரவு : ஊழல் சம்பவம் காரணமா?