Tamilnadu

திருச்சி ரயில் நிலையத்தில் பயணியிடம் இருந்த மர்ம பை... திறந்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சென்னையில் இருந்து புறப்பட்ட மங்களூர் விரைவு ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்கு இன்று காலை 11மணிக்கு வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை வழக்கம்போல் பயண சீட்டு பரிசோதகர்கள் சோதனை செய்தனர். அதேபோல் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கான நுழைவாயில்களில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேனர்கள் மூலமாகவும் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள்.

அந்த வகையில் இன்று பல்வேறு பயணிகளும் இதே போல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு ஆண் பயணியை சோதனை செய்ததில், அவர் கொண்டு வந்திருந்த கைப்பையில் மர்ம பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அவருடைய உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவரது பையில் தங்க நகைகளும் கட்டுக்கட்டாக பணமும் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்ததோடு அந்த மர்ம நபரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் லட்சுமணன் என்ற பயணி சென்னையில் இருந்து மங்களூர் விரைவு ரயில் திருச்சிக்கு நகை கொண்டு வந்தது தெரிய வந்தது

மேலும் அவர் கொண்டு வந்த நகைகளுக்கான உரிய ரசீதுகள் எதுவும் இல்லாததால் வணிகவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வணிகவரித்துறை அதிகாரிகள் வந்து அவற்றை சோதனையிட்டதில் மொத்தம் இரண்டரை கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருப்பதும் 15 லட்சம் ரூபாய் ரொக்கமாக பணம் இருப்பதும் கண்டறியப்பட்டது.

தற்போது கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து லட்சுமணனிடம் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு : தமிழ்நாடு அரசுக்கு பத்மஶ்ரீ அனிதா பால்துரை நன்றி!