Tamilnadu

“கடமை தவறினால் உடனுக்குடன் நடவடிக்கை” - அதிமுக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் இதுதான் வித்தியாசம்!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக இருந்த அருண் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் முதலில் 9 பேர் பலியான தகவல் வெளியான போதே கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை தி.மு.க அரசு துரிதமாக பணியிட மாற்றம் செய்தது. கலெக்டர் மட்டுமல்ல கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தவறியதாக எஸ்பி சமய்சிங் மீனா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மதுவிலக்கு அமலாக்க பிரிவை சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ் செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி, உதவி காவல் ஆய்வாளர் பராதி மற்றும் அப்பகுதி காவல் நிலை ஆய்வாளர் ஆனந்தன், உதவி காவல் ஆய்வாளர் ஷிவ்சந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் உள்ளிட்டவர்களும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் வகையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோர் உடனடியாக கள்ளக்குறிச்சிக்கு விரைந்தனர். 

கடந்த அ.தி.மு.க ஆட்சியை போல போலீஸ்கார்களை பாதுகாக்காமல் உடனுக்குடன் அவர்களை சஸ்பெண்ட், இடமாற்றம் போன்ற உத்தரவுகளை தி.மு.க அரசு செயல்படுத்துகிறது என்பது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விஷயம்தான்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது சம்மந்தப்பட்ட காவல் துறையினரை கூட இடமாற்றம், சஸ்பெண்ட் என முதல் கட்ட நடவடிக்கைகளைகூட எடப்பாடி அரசு எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் குட்கா ஊழலில் தொடர்புடைய டி.ஜி.பி ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் போன்றவர்களை பாதுகாக்கும் பணியைதான் செய்தது. 

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சிறப்பு டி.ஜி.பியாக இருந்த ராஜேஷ் தாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் செய்தபோது அவரின் பாதுகாப்பு பணிக்காக போன போது டெல்டா மாவட்டத்தில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக ராஜேஷ் தாஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அவரை உடனடியாக அ.தி.மு.க அரசு சஸ்பெண்ட் கூட செய்யாமல் அவரை பாதுகாத்தது. 

ஜெயலலிதா ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது செய்த விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அந்த கைதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் கிறிஸ்டோபர் நெல்சன், கே.முத்துக்கருப்பன், எஸ்.ஜார்ஜ் ஆகியோரை ஒன்றிய அரசு பணிக்கு மாற்ற அன்றை வாஜ்பாய் தலைமையிலான அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவைக் கூட மதிக்காமல் போலீஸ் அதிகாரிகளை பாதுகாத்தவர்தான் ஜெயலலிதா.

இன்னும் சொல்லப் போனால் கலைஞர் கைது விவகரத்தில் தொடர்புடைய கிறிஸ்டோபர் நெல்சனுக்கு தகவல் ஆணையர் பதவி எல்லாம் கொடுத்து கவுரவித்தார்கள். இப்படியெல்லாம் போலீஸ் அதிகாரிகளை பாதுகாக்காமல் கடமை தவறிய போலீஸ் அதிகாரிகளை உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுக்கிறது திமுக அரசு.

Also Read: “அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்கவேண்டும்” - பேட்மிண்டன் வீரர் உருக்கம் !