Tamilnadu

எத்தியோப்பியா to டெல்லி... ரூ.10 கோடி மதிப்பிலான கொக்கைன் கடத்தல்... சென்னையில் பிடிபட்ட நைஜீரிய பெண் !

சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவான NCB எனப்படும், நார்கோடிக் கண்ட்ரோல் பீரோவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து NCB தனிப்படையினர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அதோடு தங்களுக்கு துணையாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளையும் சேர்த்துக் கொண்டு, NCB மற்றும் சுங்கத்துறை இணைந்து தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். இந்த சூழலில் எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடீஸ் அபாபா நகரில் இருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, NCB மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது நைஜீரியா நாட்டைச் சேர்ந்த Friedelin April (பிரடிலீன் ஏப்ரல்) (54) என்பவர் சுற்றுலா பயணி விசாவில், எத்தியோப்பியாவின், அடிஸ் அபாபாவிலிருந்து, இந்த விமானத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது வழக்கம்போல் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனர்.

அப்போது அவர் வைத்திருந்த ட்ராலி டைப் பையின் அடிப்பாகத்தில், ரகசிய அறை இருந்தது தெரிய வந்தது. அதைத் திறந்து பார்த்த போது, அதனுள் போதை பவுடர் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக நைஜீரியா பயணியை, NCB அதிகாரிகள் தங்களுடைய சென்னை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, தீவிர விசாரணை நடத்தினர். அதோடு அந்த போதை பவுடர், என்ன ரக போதைப் பொருள் என்பதை கண்டறிவதற்காக, ரசாயன ஆய்வுக்கூடத்திற்கும் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இந்த போதை பவுடர், அதிக சக்தி வாய்ந்த கோக்கையின் போதைப் பொருள் என்று தெரிய வந்தது. அந்த நைஜீரியா பயணி கடத்தி வந்த போதைப் பொருளின் மொத்த எடை ஒரு கிலோ என்றும், அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 கோடி என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து NCB அதிகாரிகள், மேலும் தீவிர விசாரணை நடத்திய போது, நைஜீரியா பயணி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

அதாவது, இந்த போதை பொருளை நைஜீரிய ஆசாமி, சர்வதேச போதை கடத்தும் கும்பலிடம் இருந்து வாங்கி வருகிறார். அந்த சர்வதேச போதை கடத்தும் கும்பலில் இந்த நைஜீரியா ஆசாமி, காண்ட்ராக்ட் முறையில் பணியில் இருந்து வருகிறார். இவர் ஒவ்வொரு முறை கடத்தி வரும்போதும், இவருக்கு அதற்கு தகுந்தாற் போல், கணிசமான அளவு ஊதியம் கிடைக்கும்.

இந்த முறை இந்த போதை பொருளை, அடிஸ் அபாபாவிலிருந்து, விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்து, சென்னையில் இருந்து ரயில் மூலம், மும்பை சென்று, அங்கு இந்த போதைப் பொருளில் பாதி அளவில், மும்பையில் உள்ள போதை கடத்தும் கும்பல் இடம் ஒப்படைத்து விட்டு, மீதி பாதி போதை பொருளை, மும்பையில் இருந்து ரயில் மூலம் டெல்லிக்கு எடுத்து சென்று, டெல்லியில் உள்ள போதை பொருள் கடத்தும் கும்பல் இடம் ஒப்படைக்க இருந்ததாகவும் கூறினார்.

இந்த போதைப் பொருள், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டாலும், சென்னையில் யாரிடமும் இந்த போதைப் பொருளை கொடுக்காமல், மும்பை, டெல்லிக்கு கடத்தி செல்வது மட்டுமே தனது பணி என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து NCB அதிகாரிகள் மும்பை, டெல்லி மாநகரில் உள்ள NCB அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, நைஜீரிய ஆசாமியிடம் இருந்து, மும்பை, டெல்லியில் போதை பொருளை வாங்க இருந்த, சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பை டெல்லிக்கு கொண்டு செல்ல வேண்டிய போதைப்பொருள், சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வந்தது ஏன்? என்றும் NCB அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: நீட் வினாத்தாள் கசிவு வழக்கு : வாதமும் உச்சநீதிமன்ற உத்தரவும்... முழு விவரம் !