Tamilnadu

போலி ஆவண மோசடி : அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி !

கரூரில், பிரகாஷ் என்பவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் போலி ஆவணம் மூலம் மோசடியாக 4 பேர்கள் மீது பத்திர பதிவு செய்து கொண்டனர் என்று கரூர் காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்தார்.

அதன்பேரில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12ம் தேதி மனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து கைது செய்யப்படக்கூடாது என்பதற்காக கடந்த 26 நாட்களுக்கு மேலாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார்.இதனிடையே எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான முன்ஜாமீன் மனு கடந்த 25ம் தேதி முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சையின் போது உடனிருக்க வேண்டும் எனக்கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு ஜூலை 1 மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: 121 பேரை பலிகொண்ட ஹத்ராஸ் விபத்து : "சமூக விரோதிகளே காரணம் " - சாமியார் சர்ச்சைக் கருத்து !