Tamilnadu

'நீங்கள் நலமா..' : பயனாளிகளிடம் அரசின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை அடுத்து பொதுமக்கள், பெண்கள், பள்ளி - கல்லூரி மாணவர்கள் என அனைவரும் பயனடையும் வகையில் சிறப்பான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்பது தான் ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் முதன்மையான நோக்கம். மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண், முதலமைச்சரின் காலை உணவு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், ஒலிம்பிக் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் போன்ற சிறப்பான திட்டங்களால் கோடிக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு குடும்பத்தையும், தனிமனிதரையும் மேம்படுத்தும் திட்டங்கள் ஆகும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1.15 கோடி பெண்கள் மாதம்தோறும் ரூ.1,000 உரிமை தொகை பெறுகின்றனர். விடியல் பயண திட்டத்தில் 445 கோடி முறை பயணித்து பெண்கள் மாதம் ரூ.888 வரை சேமிக்கின்றனர். ஒரு கோடி பேர், ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்திலும், 16 லட்சம் மாணவர்கள் காலை உணவு திட்டத்திலும், புதுமைப்பெண் திட்டத்தில் 4.81 லட்சம் மாணவிகள் மாதம் ரூ.1,000 பெற்றும் பயனடைகின்றனர்.

நான் முதல்வன் திட்டத்தில் 28 லட்சம் இளைஞர்கள், இல்லம் தேடி கல்வியில் 24.86 லட்சம் பள்ளி குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். புதிய குடிநீர் இணைப்பை 62.40 லட்சம் பேர், புதிய இலவச மின் இணைப்பை 2 லட்சம் பேர், உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 30 லட்சம்முதியோர், 5 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பெறுகின்றனர்.

‘நம்மை காக்கும் 48’ திட்டத்தில் 2 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. முதல்வரின் முகவரி திட்டத்தில் 19.69 லட்சம் பேருக்கு பயனளிக்கும் மனுக்களுக்கும், மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் 3.40 லட்சம் மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.

இந்நிலையில், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்து கருத்துக்களைக் கேட்டறியும் முதல்வரின் முகவரி துறையின் ”நீங்கள் நலமா” என்ற திட்டத்தில் பயனாளிகளை நேரடியாக வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

Also Read: AIIMS செங்கல் முதல் நீட் போராட்டம் வரை: இளைஞரணி செயலாளராக 6ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!