Tamilnadu

பாஜக மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட தலைவர்... போலீசார் வலைவீச்சு !

சென்னை கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு செயலாளராக உள்ளவர் பால சுப்பிரமணியம் (63). இந்த சூழலில் நேற்று இவர் பாஜக சார்பில் வேளச்சேரியில் உள்ள தனியார் இடத்தில் நடைபெற்ற கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கூட்டம் முடிந்து வெளியே வந்த போது, சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யனுக்கும், பால சுப்பிரமணியனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாவட்ட தலைவர் சாய் சத்யன் கொலை மிரட்டல் விடுத்து, மூஞ்சியை உடைத்து விடுவதாக எச்சரித்துள்ளார். இதனால் மன உளைச்சல் மற்றும் பயத்திற்குள்ளான பால சுப்பிரமணியம் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பாஜக மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், வேளச்சேரி போலீசார் 294(b), 352, 506(1), உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட பாஜக மாவட்ட தலைவர் சாய் சத்யனை தேடி அவரது இல்லத்திற்கு காவல்துறையினர் சென்ற போது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. தற்போது தலைமறைவாக உள்ள பாஜக மாவட்ட தலைவர் சாய் சத்யனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also Read: நீட் ஒழிப்பு போராட்டம் : ஜூலை 15-ல் திராவிடர் கழகம் சார்பில் இரு சக்கரப் பிரச்சாரப் பயணம் - கி.வீரமணி !